கோவையில் கோவில் வளாகத்தில் வாலிபர் கழுத்து அறுத்து கொலை
கோவை:
தர்மபுரியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 30). இவர் கோவையில் தங்கி இருந்து கட்டிட வேலை செய்து வந்தார்.
இந்தநிலையில் இவர் செல்வபுரம் பனைமரத்தூரில் உள்ள மாரியம்மன் கோவில் வளாகத்தில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதனை பார்த்து அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் இது குறித்து செல்வபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியான போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து அந்த பகுதியை சேர்ந்த மக்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது ரமேசுக்கும், கஞ்சா விற்கும் சில இளைஞர்களுக்கும் இடையே பழக்கம் இருந்து வந்துள்ளது. அடிக்கடி ரமேஷ் வருவதை பார்த்ததாக அந்த பகுதியை சேர்ந்த மக்கள் தெரிவித்தனர்.
பின்னர் ரமேசின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கஞ்சா விற்கும் வாலிபர்களுடன் ஏற்பட்ட தகராறில் ரமேஷ் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாரா? அல்லதுவேறு காரணமாக ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.