திருச்சியில் இன்று மெத்தை குடோனில் தீ
திருச்சி:
திருச்சி எடமலைப்பட்டி புதூர் அன்பிலார் நகர் பகுதியில் மெத்தைகள் விற்பனை செய்யும் குடோன் உள்ளது. இங்கு விற்பனைக்காக ஏராளமான மெத்தைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக அந்த குடோன் மூடப்பட்டிருந்தது.
இந்தநிலையில் இன்று காலை திடீரென குடோனில் இருந்து கரும் புகை வெளியேறியது. இதனைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக திருச்சி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மாவட்ட அலுவலர் சுரேஷ் கண்ணா, நிலைய அலுவலர் மெல் கியூர் ராஜா தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மெத்தைகள் என்பதால் தீ கொளுந்து விட்டு எரிந்தது. இதனால் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது. பின்னர் ஒரு வழியாக போராடி தீயை அணைத்தனர்.
இருப்பினும் குடோனில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள மெத்தைகள் தீயில் எரிந்து நாசமாகின. மேலும் குடோனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் பல்வேறு பொருட்கள் தீயில் எரிந்து சேதமானது.
வெயிலின் தாக்கம் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது மின் கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருச்சி காந்தி மார்க்கெட்டில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், தற்போது மெத்தை குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.