செய்திகள்
ஊரடங்கு விதிகளை மீறிய 5 கடைகளுக்கு சீல்
மன்னார்குடி அருகே ஊரடங்கு விதிகளை மீறிய 5 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
மன்னார்குடி:
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தநிலையில் சில நிபந்தனைகளுடன் கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. அத்துடன் விற்பனையாளர்கள் முக கவசம், கையுறை அணிய வேண்டும்.
வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவேண்டும் என்பன உள்பட சில விதிமுறைகள் கடைக்காரர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் மன்னார்குடி கடைவீதியில் உதவி கலெக்டர் புண்ணியகோட்டி தலைமையில் அதிகாரிகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் ஊரடங்கு விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா? என ஆய்வு செய்தனர்.
அப்போது விதிகளை மீறிய 2 நகை கடை, ஒரு மருந்துக்கடை உள்ளிட்ட 5 கடைகளுக்கு “சீல்” வைத்தனர். அப்போது தாசில்தார் கார்த்திக், நகராட்சி ஊழியர்கள் மற்றும் பலர் உடனிருந்தனர்.