செய்திகள்
தினசரி சந்தையில் அனுமதியின்றி இயங்கி வந்த மீன்கடையை அகற்றிய தூய்மை பணியாளர்கள்

நாமக்கல் நகராட்சிக்கு சொந்தமான தினசரி சந்தையில் 14 கடைகள் அகற்றம்

Published On 2020-06-05 08:55 GMT   |   Update On 2020-06-05 08:55 GMT
நாமக்கல் நகராட்சிக்கு சொந்தமான தினசரி சந்தையில் அனுமதியின்றி இயங்கி வந்த 14 கடைகளை அதிகாரிகள் அகற்றினர்.
நாமக்கல்:

நாமக்கல்லில் உள்ள திருச்செங்கோடு சாலையில் நகராட்சிக்கு சொந்தமான தினசரி மற்றும் வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில் 84 கடைகள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால் சிலர் உரிய அனுமதி பெறாமல் கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வருவதாக நகராட்சிக்கு புகார் வந்தது.

இதையடுத்து நகராட்சி ஆணையாளர் ஜஹாங்கீர்பாஷா நேற்று ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதன்தொடர்ச்சியாக நகரமைப்பு அலுவலர் ரவீந்திரன், ஆய்வாளர்கள் கோவிந்தராஜ், முருகேசன் மற்றும் துப்புரவு ஆய்வாளர்கள் சுப்பிரமணி, செல்வராஜ், காதர் ஆகியோர் கொண்ட குழுவினர் தூய்மை பணியாளர்களுடன் சென்று அனுமதி பெறாத கடைகளை அகற்றினர்.

சிமெண்டு தூண்கள் மூலம் அமைக்கப்பட்டு இருந்த ஷெட்டுகளை, சிமெண்டு தூண்களை பாதிஅளவுக்கு உடைத்து விட்டு தூய்மை பணியாளர்கள் கயிறு கட்டி இழுத்து அகற்றினர். இரும்பு கம்பி உதவியுடன் போடப்பட்ட ஷெட்டுகளை பொக்லைன் எந்திரம் உதவியுடன் அகற்றினர். ஒரு மீன்கடை மற்றும் 13 காய்கறி கடைகள் என மொத்தம் அனுமதி பெறாமல் இயங்கி வந்த 14 கடைகள் அகற்றப்பட்டு இருப்பதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்று அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இனிவரும் காலங்களில் நகராட்சிக்கு சொந்தமான தினசரி மற்றும் வாரச்சந்தையில் கடை நடத்துவோர் எக்காரணம் கொண்டும் தங்களது கடைகளுக்கு முன்பு பொருட்களை வைத்து வியாபாரம் செய்யக் கூடாது என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். 
Tags:    

Similar News