செய்திகள்
முக கவசம்

அரசு பஸ்சில் வரும் பயணிகளுக்கு சம்பளத்தில் முக கவசம் வாங்கி தரும் கண்டக்டர்

Published On 2020-06-05 07:05 GMT   |   Update On 2020-06-05 12:20 GMT
போடியில் அரசு பஸ்சில் வரும் பயணிகளுக்கு தனது சம்பளத்தில் முக கவசம் வாங்கி தரும் கண்டக்டரின் பணி அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

மேலசொக்கநாதபுரம்:

தேனி மாவட்டம் போடி அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி வருபவர் கருப்பசாமி. கொரோனா ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு கடந்த 1-ந் தேதி முதல் குறைந்த அளவிலான பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. டிரைவர்கள், கண்டக்டர்கள், பயணிகள் அனைவரும் முக கவசம் அணிந்து பயணம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனை பொதுமக்களுக்கு எடுத்து கூறும் வகையில் கண்டக்டர் கருப்பசாமி முக கவசம் மட்டுமின்றி முழுமையான பாதுகாப்பு கவச உடை அணிந்து பணியாற்றி வருகிறார். இது மட்டுமின்றி பஸ்சில் பயணம் செய்யும் அனைத்து பயணிகளுக்கும் இலவசமாக முக கவசம் வழங்கி வருகிறார். பஸ் புறப்படும் முன்பு கொரோனா தடுப்பு குறித்த விழிப்புணர்வு கருத்துக்களையும் பொது மக்களுக்கு தெரிவித்து வருகிறார்.

இது குறித்து கருப்பசாமி தெரிவிக்கையில், கடந்த 12 ஆண்டுகளாக கண்டக்டராக பணிபுரிந்து வருகிறேன். போடியில் இருந்து திண்டுக்கல் செல்லும் வழித்தடத்தில் பணிக்கு செல்கிறேன். எனது பஸ்சில் யாரேனும் முக கவசம் அணியாமல் இருந்தால் அவர்களுக்கு எனது செலவில் வாங்கி தருகிறேன். தரமற்ற முக வசம் அணிந்திருந்தாலும் அதனை மாற்றும்படி கூறி புதிய முக கவசம் தருகிறேன். இடையில் எத்தனை பேர் பயணம் செய்தாலும் அவர்களுக்கும் முக கவசம் வழங்குகிறேன். இதற்காக தினமும் வீட்டை விட்டு கிழம்பும்போதும் 200 முக கவசம் எடுத்து வருகிறேன். மொத்தம் 2 ஆயிரம் முக கவசம் வாங்கி வைத்துள்ளேன்.

இதற்காக எனது ஒரு மாத சம்பளமான ரூ.27 ஆயிரத்தையும் செலவு செய்துள்ளேன் என்றார். கண்டக்டரின் இந்த செயல் பலரது பாராட்டையும் பெற்றுள்ளது. மேலும் சமூக வலைதளங்களிலும் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Tags:    

Similar News