செய்திகள்
ஆரணி கொசப்பாளையம் பகுதியில் கிருமி நாசினி தெளித்த நகராட்சி ஊழியர்

ஆரணியில் கொரோனா தொற்று பாதித்த பகுதிகளில் தூய்மைப்பணி

Published On 2020-06-05 07:02 GMT   |   Update On 2020-06-05 07:02 GMT
ஆரணியில் கொரோனா தொற்று பாதித்த பகுதிகளில் தூய்மைப்பணி நடந்தது.
ஆரணி:

ஆரணி கொசப்பாளையம் பகுதியில் நேற்று முன்தினம் 68 வயதான ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அப்பகுதியைச் சுற்றிலும் உள்ள கோபால் தெரு, பழனியாண்டவர் கோவில் தெரு, மருசூரான் தெரு, டாக்டர் அம்பேத்கர்நகர், பெரிய சாயக்காரத் தெரு, சுந்தரம் தெரு, மல்லிபிள்ளையார் கோவில் தெரு, பாட்சா தெரு உள்பட பல்வேறு தெருக்களில் நகராட்சி ஆணையாளர் கு.அசோக்குமார் தலைமையில் பொறியாளர் கணேசன், சுகாதார ஆய்வாளர் குமரவேல் ஆகியோர் மேற்பார்வையில் அப்பகுதிக்கு செல்லும் வழிகளை தடுப்பு கம்பிகள் வைத்து அடைத்தனர்.

கொரோனா தொற்றால் மேற்கண்ட பகுதி முழுவதும் கிருமி நாசினி, சுண்ணாம்பு நீர் தெளிப்பது, பிளீச்சிங் பவுடர் தூவுவது ஆகிய பணிகள் முழுவீச்சில் நடந்தது.

மேலும் நகராட்சி சித்த மருத்துவப் பிரிவு சார்பில் டாக்டர் சங்கரீஸ்வரி தலைமையில் களப்பணியாளர்கள் மூலம் அப்பகுதியில் உள்ள அனைத்து மக்களுக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து எஸ்.வி.நகரம் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுதா, நகராட்சி நகர ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனை டாக்டர் செந்தில் ஆகியோர் தலைமையில் மருத்துவக் குழுவினர் வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு காய்ச்சல், சளி, தும்பல், இருமல் உள்ளதா? 60 வயதுக்கு மேற்பட்டோர், 10 வயதுக்குட்பட்டோர், கர்ப்பிணிகள் ஆகியோரின் விவரங்களை கேட்டறிந்தனர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருடன் யாரேனும் தொடர்பில் இருந்தால் அவர்கள் தாமாக முன்வந்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என மருத்துவக் குழுவினர் ஒலிப்பெருக்கி மூலம் அறிவித்தனர். 
Tags:    

Similar News