செய்திகள்
போலீசார் விசாரணை

வடமாநில பெண்ணை பாலியல் தொழிலில் தள்ளி சித்ரவதை- 4 பேருக்கு வலைவீச்சு

Published On 2020-06-03 14:38 GMT   |   Update On 2020-06-03 14:38 GMT
தஞ்சை அருகே ரத்தக்காயங்களுடன் காரில் இருந்து தூக்கி வீசப்பட்ட இளம்பெண்ணை 4 மாதங்களாக வீட்டில் அடைத்து வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கணவன்-மனைவி உள்பட 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கள்ளப்பெரம்பூர்:

தஞ்சையை அடுத்த செங்கிப்பட்டி அருகே உள்ள சானூரப்பட்டி கடைவீதி அருகே உடலில் ரத்தக்காயங்களுடன் வடமாநிலத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் நேற்று முன் தினம் மதியம் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் இருந்த மாதர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகளும், பாதுகாப்பு பணியில் இருந்த செங்கிப்பட்டி போலீசாரும் பார்த்தனர்.

உடனடியாக அந்த பெண்ணை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வல்லம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி மற்றும் போலீசார் அந்த பெண்ணிடம் நேற்று விசாரணை நடத்தினர்.

போலீசாரின் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இதுகுறித்த விவரம் வருமாறு:-

ரத்த காயங்களுடன் மீட்கப்பட்ட அந்த இளம்பெண் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். 20 வயது நிரம்பிய அவர், பெங்களூருவில் முகேஷ் மல்லிகா பார்க் பகுதியில் தனது குடும்பத்தினருடன் தங்கி இருந்துள்ளார். ஐந்து மாதங்களுக்கு முன்பு அவரை அவருடைய சித்தியின் மகள் சாந்தா என்பவர் வீட்டு வேலை செய்வதற்காக தஞ்சைக்கு அனுப்பி வைத்து உள்ளார்.

பெங்களூருவில் இருந்து பஸ்ஸில் திருச்சி வந்த அவரை தஞ்சை மேலவஸ்தாசாவடியை சேர்ந்த செந்தில்குமார்(44) என்பவர், திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து காரில் தஞ்சையில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். வீட்டு வேலை செய்ய வந்துள்ளதாக நினைத்திருந்த அந்த பெண்ணுக்கு அங்கு வந்த பின்னர் கடும் அதிர்ச்சி காத்திருந்தது.

செந்தில் குமார் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் அவரது மனைவி ராஜம் என்பவரும் அந்த பெண்ணை பல்வேறு வகையிலும் துன்புறுத்தி உள்ளார். மேலும் அந்த வீட்டிற்கு பல்வேறு ஆண்கள் வந்துள்ளனர். அவர்களுடன் உடலுறவு வைத்துக்கொள்ளுமாறு அந்த பெண்ணை, செந்தில்குமார் வற்புறுத்தி உள்ளார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த அவரை கண்மூடித்தனமாக செந்தில்குமார் தாக்கி உள்ளார். மேலும் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி அந்த பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி உள்ளார். சில சமயங்களில் மறுப்பு தெரிவித்த அந்த பெண்ணுக்கு உணவு வழங்காமலும், கம்பியால் அடித்தும் துன்புறுத்தி உள்ளார்.

ஒரு நாளைக்கு ஐந்துக்கும் மேற்பட்ட ஆண்களால் அந்த இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். கடந்த நான்கு மாத காலமாகவே இதே நிலை நீடித்து வந்துள்ளது. இந்த நிலையில் அந்த பெண்ணின் தாய்க்கு உடல்நிலை சரியில்லை என கூறி அவருடைய சித்தி மகள் மூலமாக அந்த பெண்ணுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அந்த பெண், தான் உடனடியாக ஊருக்கு செல்ல வேண்டும் என செந்தில்குமாரிடம் கேட்டுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த செந்தில்குமாரும், அவருடைய மனைவியும் நேற்று முன்தினம் அந்த பெண்ணை கட்டையாலும், கைகளாலும் சரமாரியாக தாக்கி உள்ளனர். தெரியாத இடத்தில் வந்து மாட்டிக்கொண்ட தனது வாழ்வு சீரழிந்ததை நினைத்து அழுவதை தவிர வேறு வழியில்லாத அந்த பெண், தான் பெங்களூரு செல்ல வேண்டும் என்பதில் மட்டும் பிடிவாதமாக இருந்துள்ளார்.

இதனையடுத்து செந்தில்குமார் மற்றும் ஒரு பெண் மேலும் இரண்டு ஆண்கள் என மொத்தம் நான்கு பேர் அந்த பெண்ணை காரில் ஏற்றிக்கொண்டு தஞ்சை- திருச்சி சாலையில் வந்துள்ளனர். வரும் வழியிலும் காரில் வைத்து அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். மேலும் காருக்குள்ளேயே அவரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர்.

செங்கிப்பட்டி அருகே உள்ள பூதலூர் பிரிவு சாலை அருகே கார் வந்தபோது செந்தில்குமார், அந்த பெண்ணை காலால் எட்டி உதைத்து காரில் இருந்து வெளியே வீசி விட்டு சென்றுள்ளார். பலத்த காயம் அடைந்த அவர், தட்டுத்தடுமாறி அருகில் உள்ள செங்கிப்பட்டிக்கு நடந்து வந்துள்ளார். பின்னர் மாதர் சங்க நிர்வாகிகளும், செங்கிப்பட்டி போலீசாரும் அவரை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

இந்த நிலையில் அந்த பெண் கொடுத்துள்ள புகாரின் பேரில் வல்லம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி மற்றும் போலீார் தஞ்சை மேலவஸ்தாசாவடியை சேர்ந்த செந்தில்குமார், அவருடைய மனைவி ராஜம் மற்றும் இரண்டு ஆண்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவாகி விட்ட அவர்கள் 4 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

4 மாதங்களாக இளம்பெண்ணை வீட்டில் அடைத்து வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட சம்பவம் தஞ்சையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News