கோவை அருகே வேலை இல்லாத விரக்தியில் காவலாளி தற்கொலை
கோவை:
கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 50). இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கோவைக்கு வந்தார். பின்னர் செல்வபுரம் முத்துசாமி காலனியில் அறை எடுத்து தங்கி இருந்து தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
நந்தகுமார் கடந்த ஒரு மாதமாக வேலை இல்லாமல் இருந்தார். இதனால் செலவுக்கு பணம் அனுப்ப முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தார். இதனால் குடும்ப பிரச்சினை ஏற்பட்டது. இதன் காரணமாக நந்தகுமார் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு அறையில் இருந்த நந்தகுமார் வாழ்க்கையில் விரத்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நேற்று அறையில் இருந்து துர் நாற்றம் வந்தது. இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் அறையின் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தனர். அப்போது நந்தகுமார் தூக்கில் பிணமாக தொங்குவது கண்டு அதிர்ச்சியடைந்தனர். 2 நாட்களுக்கு முன்பு அவர் தற்கொலை செய்து கொண்டதால் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது.
இந்த தகவல் கிடைத்ததும் செல்வபுரம் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட நந்தகுமாரின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.