செய்திகள்
கைது

கோவையில் திருட்டு நகையை ஒப்படைக்காமல் தலைமறைவாக இருந்த பெண் போலீஸ் கைது

Published On 2020-06-03 08:03 GMT   |   Update On 2020-06-03 08:03 GMT
கோவையில் திருட்டு நகையை ஒப்படைக்காமல் தலைமறைவாக இருந்த பெண் போலீஸ் சொப்பன சுஜாவை போலீசார் கைது செய்தனர்.

கோவை:

கோவை ஒண்டிப்புதூரை சேர்ந்தவர் சொப்பன சுஜா (வயது 40). இவர் சிங்காநல்லூர் குற்றப்பிரிவில் போலீசாக வேலை பார்த்து வந்தார்.

அப்போது இவர் 11-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகளில் குற்றவாளிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 60 பவுன் தங்க நகைகளை கோர்ட்டில் ஒப்படைக்காமல் கையாடல் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பெண் போலீஸ் சொப்பன சுஜாவிடம் விசாரணை நடத்த விசாரணை அதிகாரியாக இன்ஸ்பெக்டர் சிவக்குமார் என்பவர் நியமிக்கப்பட்டார்.

ஆனால் பெண் போலீஸ் சொப்பன சுஜா விசாரணைக்கு ஒத்துழைக்காமல் விடுமுறையில் தலைமறைவானார். இதனையடுத்து அவரை போலீஸ் கமி‌ஷனர் சுமித் சரண் கடந்த பிப்ரவரி மாதம் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார். தலைமறைவான பெண் போலீஸ் சொப்பன சுஜாவை போலீசார் தேடி வந்தனர்.

இது குறித்து தற்போது சிங்காநல்லூர் குற்றப்பிரிவில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர் சங்கீதா மாநகர குற்றப்பிரிவில் புகார் செய்தார்.புகாரின் பேரில் மாநகர குற்றப்பிரிவு போலீசார் பெண் போலீஸ் சொப்பன சுஜா மீது மோசடி வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த அவரை தேடி வந்தனர். இந்தநிலையில் பெண் போலீஸ் சொப்பன சுஜாவை நேற்று இரவு அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News