செய்திகள்
தற்கொலை செய்து கொண்ட ஆசிரியை

திருச்சி அருகே மகள்களுடன் தற்கொலை செய்து கொண்ட ஆசிரியையின் குடும்ப பின்னணி - உருக்கமான தகவல்கள்

Published On 2020-06-02 14:55 GMT   |   Update On 2020-06-02 14:55 GMT
திருச்சி அருகே சொந்த பந்தங்கள் இல்லாத மன வேதனையால் ஆசிரியை குடும்பத்துடன் மாண்ட பரிதாபம் நடந்துள்ளது.
திருவெறும்பூர்:

திருச்சி மாவட்டம், திருவெறும்பூரை அடுத்த நவல்பட்டு பூலாங்குடி காலனியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி விஜயகவுரி (வயது 59). இவர் ஓய்வு பெற்ற தனியார் பள்ளி ஆசிரியை. இவரது கணவர் முருகேசன் ஏற்கனவே இறந்து விட்டார். இவர்களது மகள்கள் விஜயலட்சுமி (32), விஜயவாணி (29), மகன் விஜயகுமார் (25). இவர்களில் டிப்ளமோ படித்து முடித்த விஜயகுமார் கடந்த 10 மாதத்துக்கு முன் விபத்தில் சிக்கி வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்தநிலையில், நேற்று முன்தினம் மாலை விஜயகுமார் உடல்நிலை மோசமான நிலையில் வீட்டிலேயே இறந்துவிட்டார். விஜயகவுரி குடும்பத்தினர் அக்கம், பக்கத்தினரிடம் அதிகமாக பேசிக்கொள்வதில்லை என்பதால் விஜயகுமார் இறந்த செய்தியை அருகில் உள்ளவர்களிடம் கூட சொல்லாமல் இருந்துள்ளனர். அவர் இறந்ததை மனதுக்குள்ளேயே வைத்து வேதனையில் இருந்த விஜயகவுரி தொடர்ந்து வாழ பிடிக்காமல் 2 மகள்களுடன் தற்கொலை செய்ய முடிவு செய்தார்.

அதையடுத்து இரவு 7.30 மணிக்கு வீட்டில் உள்ள ஒரு அறையில் இறந்த விஜயகுமாரின் உடலை எடுத்து சென்றனர். பின்னர் விஜயகவுரி தனது மகள்கள் விஜயலட்சுமி, விஜயவாணி ஆகியோருடன் சமையில் அறையில் இருந்த கியாஸ் சிலிண்டரை திறந்து விட்டு மூவரும் தீயை பற்ற வைத்தனர்.

உடனே சிலிண்டர்கள் வெடித்து சிதறவே வீடு தீப்பற்றியதில் 3 பேரும் உடல் கருகி இறந்தனர். சிலிண்டர் வெடிக்கும் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அறிந்த நவல்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை செய்து கொண்ட ஆசிரியை விஜயகவுரியின் குடும்ப பின்னணி பற்றிய உருக்கமான தகவல்கள் குறித்து போலீசார் தெரிவித்ததாவது:-

மகள்களுடன் தற்கொலை செய்து கொண்ட விஜயகவுரிக்கு சொந்த ஊர் தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள ராஜகிரி ஆகும். 70 ஆண்டுகளுக்கு முன்பு அவரது தந்தை, திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் ஊழியராக வேலைபார்த்துள்ளார். பின்னர், அவர் பூலாங்குடி காலனியில் தங்கி மனைவி, மகளுடன் வாழ்க்கையை தொடங்கி உள்ளார். விஜயகவுரிக்கு உடன் பிறந்த தம்பி ஜெயசங்கர். இவர், குடும்பத்துடன் ஈரோட்டில் வசித்து வருகிறார்.

கடந்த 12 ஆண்டுகளாக தம்பி மற்றும் அவரது குடும்பத்துடன் பேச்சுவார்த்தை கிடையாது என்றும், உறவினர் வீடு என்று எங்கும் சென்றது இல்லை எனவும் கூறப்படுகிறது. மேலும் சொந்த ஊரில் உள்ள உறவுகளையும் மறந்து ஆண்டுகள் பல கடந்து விட்டன. இப்படி ஒட்டும் இல்லை உறவுகளும் இல்லை என்ற நிலையில் விஜயகவுரி பணி ஓய்வு பெற்ற பின், தனது 2 மகள்கள், மகனுடன் வாழ்க்கையை கழித்துள்ளார். உறவுகள் என்று யாரும் இல்லாத பட்சத்தில் மகள்களுக்கு திருமணம் செய்து வைக்கவும் உதவிக்கு ஆட்கள் இன்றி சிரமத்தை சந்தித்து வந்துள்ளார். அதற்கு போதிய பணமும் இல்லை என்றும் தெரிகிறது.

இந்த நிலையில்தான் கடந்த 10 மாதத்திற்கு முன்பு மகன் விஜயகுமார் விபத்தில் சிக்கி கோமா நிலைக்கு சென்று விட்ட பின்னர், அக்குடும்பமே மிகுந்த மனவேதனைக்கு ஆளாகி இருக்கிறது. சொந்தம் என்று இல்லாத மனவேதனையில் குடும்பத்துடன் தற்கொலை முடிவை தேடிக்கொண்டுள்ளனர்.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடையே போலீசார், ஈரோட்டில் இருக்கும் விஜயகவுரியின் தம்பி ஜெயசங்கரை தேடும் படலத்தை தொடங்கினர். ஒரு வழியாக அவரின் செல்போன் எண் கிடைத்ததால், போலீசார் தொடர்பு கொண்டு அக்காள் குடும்பமே மாண்டுபோன விஷயத்தை தெரிவித்தனர்.

இதையடுத்து ஜெயசங்கர் நேற்று திருச்சிக்கு வந்தார். திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை முடிந்து 4 பேரின் உடல்களையும் போலீசார் அவரிடம் ஒப்படைத்தனர். அவர்களின் உடல் திருச்சி ஓயாமரி சுடுகாட்டுக்கு எடுத்து செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.
Tags:    

Similar News