செய்திகள்
மீனவர்கள்

தொண்டி அருகே மீன் பிடிக்க கடலுக்கு செல்ல ஆர்வம் காட்டாத மீனவர்கள்

Published On 2020-06-01 14:37 GMT   |   Update On 2020-06-01 14:37 GMT
கடலுக்குச்சென்று கரை திரும்பினாலும் பிடித்து வரும் மீன்களை ஏற்றுமதி செய்ய கம்பெனிகள் முன் வராததால் இன்று முதல் கடலுக்குச்செல்ல விசைப்படகு மீனவர்கள் ஆர்வம் காட்டவில்லை.
தொண்டி:

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே சிந்தனைச்சிற்பி சிங்காரவேலர் நகர் லாஞ்சியடி, சோழியக்குடி ஆகிய கடலோர கிராமங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடல் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றனர்.

ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை மீன்களின் இனப்பெருக்க காலமாக தடைக்காலம் என அறிவிக்கும். இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக முன்னதாக தடைக்காலம் ஆரம்பித்தது. அதன்படி தடைக்காலம் முடியும் முன்னதாக தமிழக அரசு இன்று முதல் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கச்செல்லலாம் என அறிவித்தது. ஆனால் வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செல்லும் கம்பெ னிக்காரர்கள் ஊரடங்கால் தொழிலாளர்கள் குறைவு என்பதால் சரக்கு எடுக்க முன்வரவில்லை.

இதனால் ஒரு விசைப்படகிற்கு ரூ 40 ஆயிரம் வரை செலவு செய்து கடலுக்கு மீன் பிடிக்கச்சென்றாலும் கரை திரும்பிய பின்னர் பிடித்து வந்த இறால், நண்டு, கணவாய், மீன் போன்ற கடல் உணவுப்பொருட்களை உரிய விலை கொடுத்து ஏற்றுமதி செய்யும் மீன் கம்பெனிக்காரரர்கள் வாங்க வேண்டும். தற்போது ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தங்கள் கம்பெனிகளில் மீன், இறால், நண்டு போன்றவற்றை சுத்தப்படுத்தி பதப்படுத்தும் தொழிலாளர்கள் வராததால் எந்த கம்பெனிகாரர்களும் சரக்கு எடுக்க முன்வராத நிலையில் விசைப்படகு மீனவர்கள் அனைவரும் ஆர்வம் காட்டாமல் உள்ளனர்.

ஆண்டுதோறும் தடைக்காலம் முடியும் ஜூன் 15 தேதிக்குப்பின்னரே கடலுக்கு செல்வது வழக்கமாக கொண்டுள்ளனர். அதனால் மீனவர்கள் சிலர் தங்களது படகுகளை கரைக்கு இழுத்து வந்து மராமத்து பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கடலுக்குச்சென்று கரை திரும்பினாலும் பிடித்து வரும் மீன்களை ஏற்றுமதி செய்ய கம்பெனிகள் முன் வராததால் இன்று முதல் கடலுக்குச்செல்ல விசைப்படகு மீனவர்கள் ஆர்வம் காட்டவில்லை.

Tags:    

Similar News