செய்திகள்
சாலை விபத்து

கோவில்பட்டி அருகே மகளுடன் மொபட்டில் சென்ற பெண் தவறி விழுந்து பலி

Published On 2020-06-01 12:41 GMT   |   Update On 2020-06-01 12:41 GMT
கோவில்பட்டி அருகே மகளுடன் மொபட்டில் சென்ற பெண் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவில்பட்டி:

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த லிங்கம்பட்டி புது காலனியைச் சேர்ந்தவர் அந்தோணி பாண்டி. கூலி தொழிலாளி. இவருடைய மனைவி சண்முக வடிவு (வயது 38). இவர்களுடைய மகள் சிவசங்கரி (20). இவர் நேற்று முன்தினம் இரவில் லிங்கம்பட்டியில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுப்பதற்காக, தன்னுடைய தாயார் சண்முக வடிவை மொபட்டில் அழைத்து சென்றார்.

ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுத்து விட்டு, சிவசங்கரி தன்னுடைய தாயாருடன் மொபட்டில் வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். சிவசங்கரி மொபட்டை ஓட்டிச் சென்றார். சண்முக வடிவு மொபட்டின் பின்புற இருக்கையில் அமர்ந்து இருந்தார்.

லிங்கம்பட்டியில் சென்றபோது, சாலையின் குறுக்காக திடீரென்று ஆடு சென்றது. இதனால் நிலைதடுமாறிய மொபட்டில் இருந்து எதிர்பாராதவிதமாக சண்முக வடிவு தவறி சாலையில் விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி சண்முக வடிவு பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில், நாலாட்டின்புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகாதேவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மகளுடன் மொபட்டில் சென்ற பெண் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News