செய்திகள்
கலெக்டர் ராமன்

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் - கலெக்டர் ராமன்

Published On 2020-05-31 17:13 GMT   |   Update On 2020-05-31 17:13 GMT
சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கலெக்டர் ராமன் கூறினார்.
சேலம்:

சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கலெக்டர் ராமன் கூறினார்.

சேலம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நேற்று மாவட்ட கலெக்டர் ராமன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சேலம் மாவட்டத்தில் தற்போது கொரோனா நோய் தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது. இருப்பினும் வெளிமாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து சேலம் மாவட்டத்துக்கு வரும் நபர்களுக்கு நோய் தொற்று அறிகுறி உள்ளது. அதேசமயம் வெளி மாவட்டங்களில் இருந்து சிலர் முறையாக இ-பாஸ் வாங்கிக் கொண்டும், சிலர் பாஸ் எதுவும் வாங்காமல் அனுமதி இன்றி உள்ளே வருகிறார்கள்.

அவ்வாறு சேலம் மாவட்டத்துக்குள் வரும் நபர்களை மாவட்ட எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் பரிசோதனை செய்து அவர்களுக்கு நோய் தொற்று அறிகுறி இருக்கும் பட்சத்தில் அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் நிறைய நபர்களுக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு அவர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வீடுகளில் இருந்து வெளியே செல்லும்போது கட்டாயம் முக கவசம் அணிந்து இருக்க வேண்டும். முக கவசம் அணியாத நபர்களுக்கு போலீசார் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அதையும் மீறி சிலர் முககவசம் இல்லாமல் சாதாரணமாக சாலையில் நடந்து செல்வதை காணமுடிகிறது. எனவே சேலம் மாவட்டத்தை பொருத்தவரையில் முக கவசம் அணியாமல் வெளியே செல்லும் நபர்களுக்கு அபராதம் விதிப்பதோடு, தொடர்ந்து முககவசம் இல்லாமல் வெளியே வந்தால் அவர்கள் மீது போலீசார் மூலம் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

வெளி மாவட்டங்களில் இருந்து இ-பாஸ் இல்லாமல் சேலம் மாவட்டத்துக்குள் நுழைந்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று உள்ளவர்கள் கண்டறியபட்டால் அவர்களது வீடு மற்றும் குடும்ப உறுப்பினர்கள், அக்கம் பக்கத்தினர் விவரம் கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதனால் பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை.

சேலம் மாவட்டத்தில் கட்டுப்பாடுகள் உள்ள இடங்கள் எதுவும் இல்லை. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அரசால் மட்டுமே எல்லாவற்றையும் செய்துவிட முடியாது. எனவே வெளியில் செல்லும்போது கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். கடைகளுக்கு செல்லும்போது சமூக இடைவெளியை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். இதுபோன்ற வாழ்க்கை முறையை இதுவரை யாரும் அனுபவித்தது கிடையாது. எனவே அரசு கூறுகிற அறிவுரையை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News