செய்திகள்
தஞ்சை மண்டல விதை ஆய்வு பரிசோதனை அதிகாரி சிவவீரபாண்டியன்

விவசாயிகளுக்கு தரமான விதை கிடைக்க நடவடிக்கை - அதிகாரி தகவல்

Published On 2020-05-31 16:58 GMT   |   Update On 2020-05-31 16:58 GMT
விவசாயிகளுக்கு தரமான விதை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தஞ்சை மண்டல விதை ஆய்வு பரிசோதனை அதிகாரி சிவவீரபாண்டியன் கூறினார்.
திருவாரூர்:

விவசாயிகளுக்கு தரமான விதை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தஞ்சை மண்டல விதை ஆய்வு பரிசோதனை அதிகாரி சிவவீரபாண்டியன் கூறினார்.

திருவாரூர் விதை பரிசோதனை நிலையத்தை தஞ்சை மண்டல விதை ஆய்வு பரிசோதனை அதிகாரி சிவவீரபாண்டியன் திடீர் ஆய்வு செய்தார். அப்போது கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளுடன் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் பணி செய்வதை பார்வையிட்டார். விவசாயிகள், விதைச்சான்று துறை மற்றும் விதை ஆய்வு துறைகள் மூலம் பெறப்படும் விதை மாதிரிகள், பிற ரக கலப்பு சோதனை, விதைகளின் ஈரப்பதம் மற்றும் முளைப்பு திறன் குறித்து ஆய்வு பணிகளையும் அவர் பார்வையிட்டார்.

மேலும் விதை முளைப்புத்திறன் அறையில் கடைபிடிக்கப்படும் வெப்பநிலை, ஈரப்பதம், ஒளி அளவு முறை குறித்தும், முளைப்புத்திறன் சோதனை நாற்றுக்களின் வளர்ச்சி குறித்தும் ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறுகையில், ‘திருவாரூர் மாவட்டத்துக்கு நடப்பு குறுவை சாகுபடி பணிகளுக்கு தேவைப்படும் குறுவை நெல் ரகங்களான ஏ.எஸ்.டி.16, கோ-51, கோ-53, டி.கே.எம்.9, எ.டி.டி.-43, எ.டி.டி.(ஆர்) 45, எ.டி.டி-36, எ.டி.டி.-37 ஆகியவற்றுக்கு முன்னுரிமை அடிப்படையில் விதை பரிசோதனை ஆய்வு பணிகளை மேற்கொண்டு விவசாயிகளுக்கு தரமான விதைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது திருவாரூர் மாவட்ட விதை பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் கண்ணன், வேளாண்மை அலுவலர் புவனேஸ்வரி ஆகியோர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News