மதுரையில் இருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கம்- 50 சதவீத பயணிகள் முன்பதிவு
மதுரை:
கொரோனா நோய் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது இதில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் ரெயில்கள் இயக்கத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டது.
மதுரை ரெயில்வே கோட்டம் சார்பில் மதுரை - விழுப்புரம், திருச்சி- நாகர்கோவில் இடையே சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரெயில்கள் நாளை (1-ந்தேதி) முதல் இயக்கப்படுகிறது.
இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு நேற்று தொடங்கியது. இதற்காக மதுரை ரெயில் நிலையத்தில் 2 டிக்கெட் கவுண்டர்கள் திறக்கப்பட்டன. இங்கு பலர் நேரடியாக வந்து முன்பதிவு செய்தனர். இதுதவிர ஆன்லைன் மூலமும் முன் பதிவு நடைபெற்றது.
சுமார் 70 நாட்களுக்கு பிறகு ரெயில்கள் இயக்கப்படுவதால் இதில் பயணம் செய்ய பயணிகள் ஆர்வம் காட்டினர். இதனால் ஒரே நாளில் சுமார் 50 சதவீதம் இருக்கைகள் நிரம்பிவிட்டன. இன்றும் முன்பதிவு செய்ய மக்கள் ஆர்வம் காட்டினர்.
அதே நேரத்தில் சென்னைக்கு ரெயில்கள் இயக்கப்படாதது பயணிகளுக்கு பெரும் குறையாகவே உள்ளது. இதுகுறித்து மதுரை மேலமடை பாலகிருஷ்ணன் என்பவர் கூறியதாவது:-
“நான் சென்னையில் வேலை பார்த்து வருகிறேன். ஊரடங்கு காரணமாக மதுரைக்கு வந்திருந்தேன். மீண்டும் பணிக்காக சென்னை செல்ல வேண்டி உள்ளது. ஆனால் மதுரையில் இருந்து சென்னைக்கு ரெயில் இயக்கப்படவில்லை. விழுப்புரம் வரைதான் செல்ல முடியும். அங்கிருந்து எப்படி சென்னை செல்வது என்பது இதுவரை தெரியவில்லை.
மதுரையிலிருந்து சாலை மார்க்கமாக சென்னைக்கு செல்லலாம் என்றால் ‘இ-பாஸ்’ உள்ளிட்ட பல்வேறு கடினமான நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.