செய்திகள்
யானைகள்

பெரும்பாறை அருகே வாழைத் தோட்டங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள் கூட்டம்

Published On 2020-05-31 07:16 GMT   |   Update On 2020-05-31 07:16 GMT
பெரும்பாறை அருகே வாழைத் தோட்டங்களை காட்டு யானைகள் சேதப்படுத்திச் சென்றதால் விவசாயிகள் கவலையடைந்தனர்.

பெரும்பாறை:

கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களான கே.சி.பட்டி, ஆடலூர், பெரியூர், பள்ளத்துகால்வாய், சேம்படி ஊத்து உள்ளிட்ட இடங்களில் உள்ள வனப்பகுதியில் யானை, காட்டெருமை போன்ற வனவிலங்குகள் வசிக்கின்றன. இந்த நிலையில் உணவு, தண்ணீருக்காக வனவிலங்குகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிக்குள் வருவது வாடிக்கையாக உள்ளது.

சமீபகாலமாக புல்லாவெளி, நேர்மலை, புலையன் வளவு, கூட்டுக்காடு, ஆத்துக்காடு, 8 வீடு, தடியன்குடிசை ஆகிய பகுதிகளில் காட்டுயானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இவ்வாறு வரும் யானைகள் அங்குள்ள வாழை மரங்களையும், காபி, அவரை, சவ்சவ், பீன்ஸ் உள்ளிட்ட பயிர்களையும் நாசப்படுத்துகின்றன.

பெரும்பாறை அருகே உள்ள கல்லக்கிணறு கிராமத்தை சேர்ந்த முத்து பாண்டிக்கு சொந்தமான தோட்டத்தில் நேற்று முன்தினம் இரவு காட்டு யானை ஒன்று புகுந்தது. பின்னர் அங்கிருந்த காபி, வாழை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தியது. இதையடுத்து காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மாவட்ட வன அலுவலர் வித்யாவிடம் கோரிக்கை வைத்தனர். அதன் பேரில் காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கும்படி வனத்துறையினருக்கு அவர் உத்தரவிட்டார்.

இதையடுத்து கன்னிவாடி வனச்சரகர் சக்திவேல் தலைமையில் செம்பட்டி பிரிவு வனவர் அப்துல் ரகுமான், வனக்காப்பாளர் சங்கர் மற்றும் வனகாவலர்கள் புகைபோட்டும், பட்டாசு வெடித்தும் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News