செய்திகள்
கோயம்பத்தூர் மாவட்டம்

கோவை, திருப்பூரில் இருந்து இன்று மேலும் 3 சிறப்பு ரெயில்கள் இயக்கம்

Published On 2020-05-29 12:51 GMT   |   Update On 2020-05-29 12:51 GMT
கோவை, திருப்பூரில் இருந்து இன்று மேலும் 3 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. முன்னதாக அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
கோவை:

கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

இதனால் கோவை மாவட்டத்தில் தங்கி வேலை பார்க்கும் பீகார், ஒடிசா, உத்தரபிரதேசம், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், அசாம் உள்ளிட்ட வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊருக்கு சிறப்பு ரெயில் மூலம் அனுப்பப்பட்டு வருகின்றனர். கடந்த 8-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை 26 சிறப்பு ரெயில்கள் கோவையில் இருந்து பீகார், ஒடிசா, உத்தரபிரதேசம், ஜார்க்கண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களுக்கு இயக்கப்பட்டன. இதில் 33 ஆயிரத்து 881 பேர் தங்களது சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.

இந்த நிலையில் இன்று மதியம் 1.45 மணிக்கு பீகாருக்கும், இரவு 7 மணிக்கு மேற்கு வங்காளத்திற்கும் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில்களில் தலா 1600 பேர் வீதம் 3 ஆயிரத்து 200 பேர் சொந்த ஊர் செல்கின்றனர். இந்த ரெயில்களில் செல்லும் வடமாநில தொழிலாளர்கள் அனைவரும் ரெயில் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு அவர்களுக்கு காய்ச்சல், இருமல் உள்ளிட்டவை இருக்கிறதா? என்பது குறித்து பரிசோதித்தனர்.

இதேபோல் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து இன்று பீகார் மாநிலத்திற்கு மாலை 4 மணியளவில் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இதில் 1600 பேர் பயணம் செய்கின்றனர். முன்னதாக அவர்கள் திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளிக்கு அழைத்து வரப்பட்டு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Tags:    

Similar News