செய்திகள்
கியூஆர் கோட் திருமண அழைப்பிதழ் - கோப்புப்படம்

கோவையில் கியூ.ஆர். கோட் மூலம் காணொலி திருமண அழைப்பிதழ் விற்பனை

Published On 2020-05-28 11:09 GMT   |   Update On 2020-05-28 11:09 GMT
திருமண அழைப்பிதழ் விற்பனையை அதிகரிக்கும் முயற்சியாக ‘காணொலி திருமண அழைப்பிதழ்’ விற்பனைக்கு வந்துள்ளது.
கோவை:

கொரோனா பாதிப்பு காரணமாக திருமண விழாக்களில் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே உறவினர்கள் பங்கேற்க அரசு அறிவுறுத்தியுள்ளது. இதன் காரண மாக திருமணத்தை அடிப்படை யாக கொண்டு செயல்படும் தொழில்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. திருமண அழைப்பிதழ் விற்பனை செய்யும் கடைகள் இந்த கொரோனா ஊரடங்களால் பெரும் பாதிப்பினை சந்தித்துள்ளது. இதுகுறித்து திருமண அழைப்பிதழ் விற்பனை செய்யும் கடை உரிமையாளர் ஒருவர் கூறியதாவது:-

வைகாசி மாதங்களில் அதிக திருமணங்கள் நடைபெறும். 5 லட்சம் அழைப்பிதழ்கள் வரை விற்பனையாகும். இந்த ஆண்டு வைகாசி மாதத்தில் வெறும் 10 முதல் 15 ஆயிரம் அழைப்பிதழ் மட்டுமே விற்பனையாகி உள்ளது. திருமண அழைப்பிதழ் விற்பனையை அதிகரிக்கும் முயற்சியாக ‘காணொலி திருமண அழைப்பிதழ்’ விற்பனைக்கு வந்துள்ளது.

இந்த அழைப்பிதழில் பொறிக்கப்பட்டுள்ள கியூ.ஆர் கோடு மூலம் வீடியோ காட்சிகளை பார்க்க முடியும். அழைப்பிதழை நேரடியாக சென்று கொடுக்க முடியாத சூழலில் கூரியர் மூலம் உறவினர்களுக்கு அனுப்பி விடலாம். அழைப்பிதழ் கவரில் உள்ள கியூ.ஆர் கோடு மூலம் உறவினர்கள் வீடியோ காட்சிகளை பார்க்கும் போது, அதில் திருமணத்திற்கு வரும்படி பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சிகளை காணமுடியும். உறவினர்களை நேரில் சென்று அழைக்காமலே அழைத்ததை போன்ற உணர்வை ஏற்படுத்த முடியும்.

அழைப்பிதழில் இருக்கும் கியூ.ஆர் கோட் மூலம் திருமண தினத்தன்று திருமணத்தையும், வரவேற்பையும் வீடியோவில் பார்க்க முடியும். ஆன்லைனில் மொய் தொகை அனுப்பவும், பரிசு பொருட்களை அனுப்பவும் தேவையான தகவல்களை இந்த அழைப்பிதழில் பதிவு செய்து கொடுக்க முடியும். திருமணத்திற்கு நேரடியாக செல்ல அவசியம் இல்லாத வகையில் , திருமணத்தில் கலந்து கொண்டதை போன்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த திருமண அழைப்பிதழ் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News