செய்திகள்
விபத்து

மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி தம்பதி பலி

Published On 2020-05-25 15:55 GMT   |   Update On 2020-05-25 15:55 GMT
வருசநாடு அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி தம்பதி பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடமலைக்குண்டு:

தேனி மாவட்டம் வருசநாடு அருகே உள்ள அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் வாசகர் (வயது 52). இவருடைய மனைவி அமுதா (45). இவர்கள், இருவரும் கட்டுமான தொழிலாளர்கள். நேற்று இவர்கள் சிந்தலைச்சேரி கிராமத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வருசநாடு நோக்கி திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.

கடமலைக்குண்டு அருகே அய்யனார் கோவில் பகுதியில் வந்தபோது எதிரே தக்காளி பழங்களை ஏற்றிக் கொண்டு ஒரு மினிவேன் வந்தது. எதிர்பாராத விதமாக அந்த மினிவேன், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தம்பதி இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் அவர்கள் 2 பேரும் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

விபத்துக்கு காரணமான மினிவேன் டிரைவர் வேனை சம்பவ இடத்தில் நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். விபத்து குறித்து தகவல் அறிந்த கடமலைக்குண்டு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News