செய்திகள்
வாடிப்பட்டி அருகே மணல் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்
வாடிப்பட்டி அருகே மணல் கடத்திய 2 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாடிப்பட்டி:
வாடிப்பட்டி அருகே உள்ள பாண்டியராஜபுரம் பகுதி தான் மாவட்ட எல்லையாக உள்ளது. எனவே இங்கு போலீசார் சோதனைச்சாவடி அமைத்து கண்காணிக்கின்றனர். இங்கு திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை பகுதியில் இருந்து மதுரைக்கு மணல் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்தது. அந்த லாரியை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அப்போது அந்த லாரியில் கிராவல் மண் எடுத்து வருவதற்கான அரசின் அனுமதி சீட்டை வைத்து ஆற்று மணலை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மணலுடன் லாரியை பறிமுதல் செய்தனர்.
அதேபோல் குலசேகரன்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது அங்கு வந்த லாரியிலும் அதே போல கிராவல் மண் நடைச்சீட்டு ரசீதை வைத்து ஆற்று மணல் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது சம்பந்தமாக வாடிப்பட்டி இன்ஸ்பெக்டர் சில்வியா ஜாஸ்மின், சப்-இன்ஸ்பெக்டர் கேசவ ராமச்சந்திரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.