நகை கடை மேலாளரை அரிவாளால் மிரட்டி நகை-ரூ.20 ஆயிரம் பணம் கொள்ளை
திருப்பூர்:
திருப்பூர் குமரன் மெயின்ரோட்டில் நகை அடகு கடை உள்ளது.
இந்த கடையில் மேலாளராக தங்கராஜ் என்பவர் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இந்த கடையில் தங்கராஜூம், பெண் ஊழியர் ஒருவரும் பணியில் இருந்தனர்.
அப்போது கடைக்குள் வாலிபர் ஒருவர் ஹெல்மெட், முக கவசம் அணிந்தபடி வந்தார். தங்கராஜ் அவரிடம் என்னவென்று கேட்டார். அப்போது நகை அடகு வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து அந்த நபரிடம் தங்கராஜ் பேசி கொண்டிருந்தார். அப்போது அந்த மர்ம நபர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து தங்கராஜ் மற்றும் பெண் ஊழியரை மிரட்டினார். மேலும் கடையில் உள்ள பணம் மற்றும் நகையை தருமாறு கேட்டார்.
ஆனால் அவர்கள் கொடுக்க மறுக்கவே அரிவாளால் வெட்ட முயன்றார். பின்னர் கடையில் இருந்த 10 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை எடுத்து கொண்டு எதுவும் தெரியாதது போல் தப்பி சென்றுவிட்டார்.
இதையடுத்து தங்கராஜ் வெளியில் வந்து தேடி பார்த்தார். ஆனால் அந்த நபரை எங்கும் காணவில்லை. பின்னர் இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீசில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கடையில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது அதில் வாலிபர் ஒருவர் ஹெல்மெட், முக கவசம் அணிந்தபடி கடைக்குள் நுழைவது பதிவாகி இருந்தது. அதில் அந்த வாலிபர் ஏற்கனவே அனுப்பர்பாளையம் பகுதியில் நடந்த கொள்ளையில் தொடர்புடையவர் என்பது தெரியவந்தது.
இந்த காட்சிகளை வைத்து விசாரித்ததில் அவர் திருப்பூலுவப்பட்டி பகுதியை சேர்ந்த அழகுவேல் என்பது வந்ததும் தெரியவந்தது.
இவர் ஏற்கனவே இந்த கடைக்கு நகையை அடகு வைக்க வந்துள்ளார். அப்போது இந்த கடை தனியாக இருப்பதை அறிந்து கொண்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
மேலும் அனுப்பர்பாளையம் பகுதியில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அழகு வேலை வலைவீசி தேடி வருகின்றனர்.