செய்திகள்
திருப்பூர் அருகே விபத்தில் காவலாளி பலி
திருப்பூர் அருகே விபத்தில் காவலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெள்ளகோவில்:
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை சேர்ந்தவர் கணேசன்(60). இவர் கரூர் ரெயில் நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.நேற்று பல்லடத்தில் இருந்து வேலைக்கு கரூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
அப்போது வெள்ளகோவில் அருகே காடையூரான் வலசு பகுதியில் வந்த போது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்ற லாரி மீது மோதியது. இதில் கணேசன் தூக்கி வீசப்பட்டு பலத்த காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.