செய்திகள்
கொலை

தென்காசியில் வாலிபர் கொலை- போலீசார் விசாரணை

Published On 2020-05-23 07:38 GMT   |   Update On 2020-05-23 07:38 GMT
தென்காசியில் வாலிபர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்காசி:

தென்காசி குத்துக்கல்வலசை அருகே உள்ள தனியார் தோட்டத்துக்குள் நேற்று மாலை ஒரு வாலிபர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக தென்காசி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங், துணை சூப்பிரண்டு கோகுல கிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் கள் ஆடிவேல் (தென்காசி), மனோகரன் (ஆய்குடி) ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

அங்கு ஒருவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவருக்கு 25 வயது இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், அங்கு மதுபாட்டில்களுடன் கறி சாப்பாடு சமைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த வாலிபர் பிணத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

பின்னர் இதுதொடர்பாக போலீசார் சந்தேகப்படும் படியான சிலரை பிடித்தனர். மதுபோதையில் இருந்த அவர்களிடம் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் சிவகங்கையை சேர்ந்த பசும்பொன் என்பவருடைய மகன் பிரதீப் என்பது தெரியவந்தது. பசும்பொன்னுக்கு 2 மனைவிகள். இதில் 2-வது மனைவி தென்காசி பகுதியை சேர்ந்தவர். இதனால் பிரதீப் தென்காசியில் உள்ள வெல்கம் நகரில் வசித்து வந்தார். கேரள எல்லையில் பழங்கள், காய்கறி வியாபாரம் செய்து வந்துள்ளார். தற்போது கொரோனா ஊரடங்கையொட்டி வேலைக்கு செல்லவில்லை.

இந்த நிலையில் நேற்று சிலர் மதுவுடன் கறி சாப்பாடு தயார் செய்து வைத்திருப்பதாக கூறி பிரதீப்பை தோப்புக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மதுபோதையில் அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் பிரதீப்பை அரிவாளால் வெட்டி கழுத்தை அறுத்து கொலை செய்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

மேலும் பிரதீப் மீது போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்ன காரணம்? என்பது தெரியவில்லை.

இதுதொடர்பாக பிடிபட்டவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பயங்கர கொலை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News