ஆயக்குடியில் மாசடைந்து வரும் குடிநீரால் நோய் பரவும் அபாயம்
பழனி:
பழனி அருகே உள்ள ஆயக்குடி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்கு சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர்.
இங்கு வசிக்கும் மக்களுக்கு வரதமாநதி அணையில் இருந்து தண்ணீர் எடுத்து சுத்திகரிப்பு செய்து வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் ஆயக்குடி பேரூராட்சி பகுதியில் கடந்த சில மாதங்களாகவே குடிநீரானது மாசடைந்து கலங்கிய நிலையில் இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், எங்கள் பகுதிக்கு கடந்த சில மாதங்களாகவே தண்ணீர் பெட்ரோலை போன்ற நிறத்தில் உள்ளது. இதனால் அதை குடிக்கும் மக்களுக்கு சளித்தொற்று, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகிறது.
இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்த பலனும் இல்லை. மேலும் வரதமாநதி அணையில் இருந்து தண்ணீர் சுத்திகரிக்கும் நிலையத்தில் சுத்திகரிப்பு எந்திரம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
ஆகவே அங்கு புதிய சுத்திகரிப்பு எந்திரத்தை பொருத்தினால் மட்டுமே இதற்கு நிரந்த தீர்வாகும். சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.