செய்திகள்
திருட்டு

வீடுகளில் நள்ளிரவில் புகுந்து 2 பெண்களிடம் நகை பறிப்பு

Published On 2020-05-22 09:15 GMT   |   Update On 2020-05-22 09:15 GMT
ஒரத்தநாடு அருகே வீடுகளில் நள்ளிரவில் புகுந்து 2 பெண்களிடம் 11 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரத்தநாடு:

ஒரத்தநாடு அருகே பொய்யுண்டார் கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 30), இவரது மனைவி கிருபாராணி (27). கார்த்திக் வெளிநாட்டில் வேலைபார்த்து வருவதால் கிருபாராணி வீட்டில் தனியாக வசித்துவருகிறார்.

இந்நிலையில் நேற்று இரவு தனது வீட்டின் வெளிப்புற கதவை பூட்டாமல் சாதாரணமாக மூடிவிட்டு வீட்டு முன்பக்க வராண்டாவில் தூங்கிகொண்டிருந்தார்.

நள்ளிரவு மர்ம நபர்கள் 2 பேர் அவரது வீட்டின் வெளிப்புற கதவை நைசாக திறந்து உள்ளே நுழைந்து வராண்டாவில் தூங்கிக்கொண்டிருந்த கிருபாராணியின் கழுத்தில் அணிந்திருந்த 7½ பவுன் தாலி செயினை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். கிருபாராணியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தப்பி ஓடிய மர்ம நபர்களை தேடினர்.

அதேபகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (32). இவரது மனைவி ஆர்த்திகா (26). வெங்கடேசன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தனது மாமனாருக்கு துணையாக இருந்து வருவதால் அவரது மனைவி வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு வீட்டின் வெளிப்புற திண்ணையில் தூங்கிக்கொண்டிருந்த ஆர்த்திகாவின் கழுத்தில் அணிந்திருந்த 3½ பவுன் செயினை மர்ம நபர்கள் பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

இந்த இருவேறு சம்பவங்கள் குறித்து ஒரத்தநாடு போலீசில் இருவரும் புகார் அளித்தனர். அதில் அவர்கள் கொடுத்த தகவலின்படி இந்த இரு செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டதும் ஒரே நபர்கள் என தெரியவந்தது.

இதுகுறித்து ஒரத்தநாடு இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News