செய்திகள்
ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ.

அதிமுக அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த மு.க.ஸ்டாலின் முயற்சி- ராஜன் செல்லப்பா குற்றச்சாட்டு

Published On 2020-05-20 08:46 GMT   |   Update On 2020-05-20 08:46 GMT
அ.தி.மு.க. அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த மு.க.ஸ்டாலின் முயற்சிப்பதாக ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. குற்றம் சாட்டியுள்ளார்.
மதுரை:

மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் திருப்பாலையில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட நிவாரண தொகுப்புகளை மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா வழங்கினார்.

நிகழ்ச்சியில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசியதாவது:-

கடந்த 60 நாட்களுக்கும் மேலாக இந்த ஊரடங்கு காலத்திலும் மக்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய தேவைகளும் கிடைக்க செய்துள்ளோம். இதுமட்டுமல்லாது ரூ.3280 கோடி மதிப்பில் மக்களுக்கு பல்வேறு நிவாரண உதவிகளை முதல்-அமைச்சர் வழங்கியுள்ளார். இந்தியாவில் இது போன்று எந்த மாநிலத்திலும் வழங்கியது கிடையாது.

இன்றைக்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மக்களை திசை திருப்பும் வண்ணம் ஒன்றிணைவோம் வா என்ற பெயரில் வீட்டிலிருந்தபடியே நாடகத்தை அரங்கேற்றினார்.

ஆனால் அவரால் செய்ய முடியவில்லை. ஏனென்றால் அவர் மக்களுக்காக செய்யவில்லை. இந்த அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும், அதே போல் தன்னை அரசியலில் நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லை என்றால் நாம் காணாமல் போய்விடுவோம் என்ற காரணத்தினால் செய்கிறார்.

ஸ்டாலினை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஏனென்றால் இன்றைக்கு 8 கோடி மக்களின் நன்மதிப்பைப் பெற்ற முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி திகழ்கிறார்.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News