செய்திகள்
காவிரி ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலி
காவிரி ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளிபாளையம்:
சேலம் தாதகாப்பட்டியை சேர்ந்தவர் கோபி (வயது 34). இவர் அதே பகுதியில் உள்ள பனியன் கம்பெனியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருடைய பாட்டி பள்ளிபாளையம் ஆவரங்காடு பெரியார் நகர் பகுதியில் வசித்து வந்தார்.
இந்தநிலையில் பாட்டி இறந்ததையொட்டி கோபி நேற்று பள்ளிபாளையம் வந்தார். இறுதி சடங்கு முடிந்து கோபி அங்குள்ள காவிரி ஆற்றில் குளிக்க சென்றார். அப்போது அவர் ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்து சென்ற வெப்படை தீயணைப்புபடை வீரர்கள் பரிசல் ஓட்டிகள் உதவியுடன் கோபியின் உடலை மீட்டனர். இதுகுறித்து பள்ளிபாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.