செய்திகள்
மின்சாரம் தாக்கியதில் இறந்து கிடக்கும் மூதாட்டி சரோஜா மற்றும் சினைபசுவை படத்தில் காணலாம்.

ஒரத்தநாடு அருகே மின்சாரம் தாக்கி சினைப்பசு பலி- காப்பாற்ற சென்ற மூதாட்டியும் பலி

Published On 2020-05-13 10:00 GMT   |   Update On 2020-05-13 10:00 GMT
ஒரத்தநாடு அருகே மின்சாரம் தாக்கி சினைப்பசு, மூதாட்டி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஒரத்தநாடு:

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுக்கா ஒக்கநாடு கீழையூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் தங்கையன் என்கிற செல்லப்பன். இவரது மனைவி சரோஜா (வயது 53). இவர் நேற்று மாலை சினை பசுமாட்டை மேய்ப்பதற்காக அவருக்கு சொந்தமான வயலுக்கு ஓட்டிச்சென்று மேய்ச்சல் பகுதியில் விட்டுவிட்டு உட்கார்ந்திருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக சினைபசு அறுந்து கிடந்த மின்வயரில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.

இதைப்பார்த்த சரோஜா மின் வயரில் பசு சிக்கி தவிப்பதை அறியாமல் பசுவின் மேல் கிடந்த கம்பியை எடுக்க முயற்சித்துள்ளார். அப்போது மின்சாரம் சரோஜா மீதும் தாக்கியது. இதில் மூதாட்டி சரோஜா மற்றும் சினைப்பசு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் பற்றி அறிந்த அந்த கிராம மக்கள் ஒரத்தநாடு மின்சார வாரிய அலுவலகத்திற்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.

ஒரத்தநாடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சரோஜாவின் உடலை கைப்பற்றி அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இறந்த சினை பசுவை ஒக்கநாடு கீழையூர் கால்நடை மருந்தக மருத்துவர் பிரேத பரிசோதனை செய்தார்.

இந்த பரிதாப சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News