செய்திகள்
வானிலை நிலவரம்

இந்த மாவட்டங்களில் எல்லாம் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

Published On 2020-05-13 08:26 GMT   |   Update On 2020-05-13 08:26 GMT
அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தின் 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை:

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் மற்றும் புதுவை, காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

அடுத்த 24 மணி நேரத்திற்கு திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது. ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும்.



தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது வரும் 15ஆம் தேதி மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தெற்கு வங்கக் கடல் பகுதியில் மையம் கொள்ளும். 

இதனைத் தொடர்ந்து 16 ஆம் தேதி புயலாக வலுப்பெறக்கூடும். இதன் காரணமாக தெற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக் கடல் பகுதிகளில் வரும் 15ஆம் தேதி சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் அவ்வப்போது 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

16ம் தேதி சூறாவளி காற்று மணிக்கு 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்திலும் அவ்வப்போது 75 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 16ம் தேதி சூறாவளி காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் அவ்வப்போது 85 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதன் காரணமாக மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்

கடந்த 24 மணி நேரத்தில் பேராவூரணியில் அதிகபட்சமாக 10 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. காரைக்காலில் 5 செமீ மழை பதிவாகி உள்ளது.

இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News