செய்திகள்
கார்த்தி சிதம்பரம்

சிறப்பு நீதிமன்றத்துக்கு வழக்கை மாற்றியது செல்லும்- கார்த்தி சிதம்பரம் மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

Published On 2020-05-12 06:40 GMT   |   Update On 2020-05-12 06:43 GMT
வருமான வரி வழக்கை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியதை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் எம்பி மற்றும் அவரது மனைவி ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
சென்னை:

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும் சிவகங்கை காங்கிரஸ் எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோர் வருமானத்தை மறைத்ததாக வருமான வரித்துறை 2018ல் வழக்கு தொடர்ந்தது. வருமான வரிக்கணக்கில் கடந்த 2015-16ம் ஆண்டு, முட்டுக்காடு கிராமத்தில் உள்ள 1.18 ஏக்கர் நிலத்தை விற்றதன் மூலம் கிடைத்த வருமானத்தில் 6.38 கோடி ரூபாயை கணக்கில் காட்டவில்லை என குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

இந்த வழக்கு, கடந்த ஆண்டு ஜூலை மாதம், எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. வழக்கு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதை எதிர்த்து, கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வருமான வரிதுறை வழக்கு பதிவு செய்த போது எம்.பி.யாக கார்த்திக் சிதம்பரம் இல்லை. எனவே இந்த வழக்கை மாற்றியதை ரத்து செய்ய வேண்டும், அதுவரை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரியிருந்தனர்.

இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், வழக்கை ரத்து செய்யக் கோரியும், சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியதை எதிர்த்தும் கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். 

கார்த்தி சிதம்பரம் மீதான வருமான வரி வழக்கை ரத்து செய்ய மறுத்த நீதிபதிகள், எம்.பி. - எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு வழக்கை மாற்றியது செல்லும் என்றும் உத்தரவிட்டனர். 
Tags:    

Similar News