செய்திகள்
தேசத்துரோக வழக்கை சட்டப்படி சந்திப்பேன்- சீமான் பேட்டி
என் மீது தேசத்துரோக வழக்கு போடுவது புதிது அல்ல. 3-வது முறையாக போட்டு இருக்கிறார்கள். இந்த வழக்கையும் நான் சட்டப்படியாக எதிர்கொள்வேன் என்று சீமான் கூறியுள்ளார்.
சென்னை:
சென்னை வளசரவாக்கம் பகுதியில் வசிக்கும் 50 இலங்கை அகதிகள் குடும்பத்தினர் ஊரடங்கால் வருவாய் மற்றும் உணவின்றி தவித்தனர். அவர்கள் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் உதவி கேட்டனர். எனவே அந்த குடும்பங்களுக்கு ஒரு மாதத்துக்கு தேவையான அரிசி மற்றும் மளிகை பொருட்களை சீமான் வழங்கினார்.
பின்னர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க.வினர் மதுவுக்கு எதிராக போராடுவது வேடிக்கை. அதிக சாராய ஆலைகள் வைத்திருப்பது அவர்கள் தான். நாங்கள் அரசுக்கு சாராயத்தை வினியோகிக்க மாட்டோம். சாராய ஆலைகளை மூடுவோம் என்று அவர்கள் சொல்லவே இல்லையே. இது மலிவான அரசியல். என் மீது தேசத்துரோக வழக்கு போடுவது புதிது அல்ல. 3-வது முறையாக போட்டு இருக்கிறார்கள். இந்த வழக்கையும் நான் சட்டப்படியாக எதிர்கொள்வேன். மத்திய சுகாதாரத்துறை மந்திரி கொரோனாவுடன் வாழ பழகி கொள்ள வேண்டும் என்று சொல்கிறார். இதை ஆரம்பத்திலேயே சொல்லி இருக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.