திருவாரூரில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த இளம்பெண்ணின் செயின் பறிப்பு
திருவாரூர்:
திருவாரூர் செட்டியார்நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வமணி. இவரது மகள் நித்தியஸ்ரீ (வயது 20). இவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். தற்போது ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு வந்து வீட்டில் தங்கியுள்ளார்.
வெயிலின் தாக்கம் காரணமாக நேற்று இரவு நித்தியஸ்ரீ தனது வீட்டின் நுழைவுவாயிலில் தூங்கியுள்ளார். இன்று அதிகாலை அந்ததெரு வழியாக வந்த மர்ம நபர் ஒருவர் நித்தியஸ்ரீ தூங்கிக்கொண்டிருப்பதை அவரது வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்துள்ளோர்.
இதையடுத்து அங்கு சென்று ஜன்னல் கம்பி வழியாக நைசாக கையைவிட்டு நித்தியஸ்ரீ கழுத்தில் அணிந்திருந்த 2½ பவுன் தங்க செயினை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து நித்தியஸ்ரீ திருவாரூர் நகர போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.