செய்திகள்
சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன்

சென்னையில் அடுத்த 6 நாளுக்கு கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் - சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன்

Published On 2020-05-11 00:11 GMT   |   Update On 2020-05-11 00:11 GMT
பரிசோதனைகள் அதிகப்படுத்தப்பட்டு உள்ளதால், அடுத்த 6 நாட்களுக்கு சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் என சிறப்பு அதிகாரி டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை:

சென்னையில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் உள்ள 15 மண்டலத்தில் 8 மண்டலங்கள் மட்டும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதில் ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னையில் எடுக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், பாதிப்புகள் குறித்து கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி டாக்டர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் ஆகியோர் ராயபுரம் மண்டலத்தில் ஆய்வு செய்தனர்.

இதையடுத்து டாக்டர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

அனைவரிடமும் ஒரு தாழ்மையான வேண்டுகோளை முன்வைக்கிறேன். கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை வைத்து அச்சப்பட தேவையில்லை. ஏனென்றால் கடந்த 9 நாட்களாக கோயம்பேடு மார்க்கெட் மற்றும் வட சென்னை பகுதிகளில் கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருந்த அனைவரையும் 19 கூடுதல் மருத்துவக் குழுக்கள் பரிசோதனை செய்துள்ளன. அதில் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக வந்துள்ளது.

தற்போது பரிசோதனை அதிகப்படுத்தப்பட்டு உள்ளதால், பாதிப்பு எண்ணிக்கையும் அதிகமாகத்தான் இருக்கும். 
சென்னையில் அடுத்த 6 நாட்களுக்கு இதுபோன்று அதிக எண்ணிக்கையில்தான் முடிவுகள் வரும். சென்னையில் தான் அதிகளவில் பரிசோதனைகள் செய்யப்படுகிறது.

கொரோனா என்னும் கண்ணுக்கு தெரியாத கிருமிக்கு எதிராக நாம் நடத்தக்கூடிய போரில், மனித குலமே தன்னைத்தானே சிப்பாய்களாக மாற்றிக்கொள்ள வேண்டும். தொண்டை மற்றும் மூக்கு வழியாகதான் நோய் மிக வேகமாகப் பரவுகிறது. பிறருக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க ஒவ்வொருவரும், தங்களை முதலில் பாதுகாக்க வேண்டும். உள்ளாடைகள் அணிவதைப் போல அனைவரும் முக கவசம் அணிவதை கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும்.

கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துவிட்டது. சென்னையில் 170 வார்டுகளில் 30-க்கும் குறைவான பாதிப்புகளே காணப்படுகிறது. 300-க்கும் மேற்பட்ட பாதிப்புகள் 2 வார்டுகளில் மட்டுமே உள்ளது. இந்த பகுதிகளில் பரிசோதனை செய்யும்போது முடிவு அதிக எண்ணிக்கையில் வரும்.

சென்னையில் 30 சதவீத மக்கள் முக கவசம் அணிவதே இல்லை. சென்னையில் இறப்பு விகிதம் 0.68 என குறைந்துள்ளது. இந்த இறப்பு விகிதத்தை பூஜ்ஜியம் ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். தற்போது பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டு விட்டது. சமூக இடைவெளி பின்பற்றாத கடைகளுக்கு அபராதம் விதித்து சீல் வைக்கும் நடவடிக்கையும் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News