செய்திகள்
கொலை

பொள்ளாச்சியில் மகளிடம் பேசிய வாலிபரை அடித்து கொன்ற தந்தை

Published On 2020-05-10 11:30 GMT   |   Update On 2020-05-10 11:30 GMT
பொள்ளாச்சியில் மகளிடம் பேசிய வாலிபரை அடித்து கொன்ற தந்தை உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பொள்ளாச்சி:

கோவை மாவட்டம் பொள்ளாச்சி சூளேஸ்வரன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 50). லாரி உரிமையாளர். இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். சம்பவத்தன்று அண்ணாதுரையின் மனைவி மகளை வீட்டில் விட்டுவிட்டு தாங்கள் புதிதாக கட்டி வரும் வீட்டை பார்க்க சென்றார்.

பின்னர் வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டில் இருந்த அவரது மகளுடன் சின்னம்பாளையம் பகுதியை சேர்ந்த கவுதம்(21) என்பவர் பேசி கொண்டிருந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சியான அண்ணாதுரையின் மனைவி சம்பவம் குறித்து தனது கணவருக்கு தகவல் கொடுத்தார். மேலும் அந்த வாலிபர் தப்பித்து சென்று விட கூடாது என்பதற்காக அவர்கள் 2 பேரையும் உள்ளே வைத்து பூட்டினார்.

தகவல் அறிந்து அண்ணாதுரை, தனது மகன் குருதேவ், உறவினர் விஸ்வநாதன் ஆகியோருடன் வீட்டிற்கு விரைந்து வந்தார்.

பின்னர் கதவை திறந்து உள்ளே சென்று யார் நீ? எதற்காக இங்கு வந்தாய் என்று கூறி தகராறில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த அண்ணாதுரை உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து மரக்கட்டை மற்றும் கிரிக்கெட் பேட்டால் கவுதமை தாக்கினர்.

இதை பார்த்து அதிர்ச்சியான கவுதமின் நண்பர் ஓடி வந்து தடுக்க முயன்றார். ஆனால் அவர்கள் தொடர்ந்து கவுதமை தாக்கினர். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த கவுதம் ரத்த வெள்ளத்துடன் மயங்கி விழுந்தார்.

இதை பார்த்து பதறி போன கவுதமின் நண்பர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதுகுறித்து கவுதம் தாயார் கொடுத்த புகாரின் பேரில் பொள்ளாச்சி கிழக்கு போலீசார் கவுதமை தாக்கியதாக அண்ணாதுரை உள்ளிட்ட 3 பேர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News