செய்திகள்
மெட்ரோ ரெயில்

3 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்க திட்டம்

Published On 2020-05-09 10:58 GMT   |   Update On 2020-05-09 10:58 GMT
சென்னையில் ஊரடங்கு முடிவுக்கு வந்த பிறகு 3 நிமிடத்துக்கு ஒரு ரெயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை:

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக மெட்ரோ ரெயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வந்த பிறகு மீண்டும் மெட்ரோ ரெயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சில கட்டுப்பாடுகளுடன் சென்னையில் மெட்ரோ ரெயில் சேவையை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

அனைத்து பயணிகளும் தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் பரிசோதனை செய்யப்படுவார்கள். கைகளை கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்த பிறகு சமூக இடைவெளியை பின்பற்றி பயணிகள் வரிசையாக ரெயில் நிலையங்களுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

மெட்ரோ ரெயில் பெட்டியில் 5 பேர் அமரக்கூடிய இருக்கையில் 2 பேரும் 2 பேர் அமரக்கூடிய இருக்கையில் ஒருவரும் அமர வைக்கப்படுவார்கள். ரெயிலில் நின்று கொண்டு பயணம் செய்யும் பயணிகள் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

காலை மற்றும் மாலையில் பரபரப்பான நேரத்தில் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்தால் அதிக ரெயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஊரடங்குக்கு முன்பு காலை மற்றும் மாலையில் பரபரப்பான நேரத்தில் 5 நிமிடத்துக்கு ஒரு ரெயில் இயக்கப்பட்டது. ஊரடங்கு முடிவுக்கு வந்த பிறகு 3 நிமிடத்துக்கு ஒரு ரெயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மெட்ரோ ரெயில் நிலையங்கள் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தூய்மையாக வைக்கவும் ரெயில் பெட்டிக்குள் இருக்கைகள், கைப்பிடிகள் போன்றவற்றிலும் கிருமி நாசினி தெளித்து பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மெட்ரோ ரெயில் சேவையை பயன்படுத்தும் பயணிகள் டோக்கன்களுக்கு பதிலாக ஸ்மார்ட்கார்டு அல்லது ஒரு முறை பயன்படுத்தும் காகித பயணச் சீட்டை வாங்க வேண்டும்.

அப்பயணிகள் தங்கள் வாகனத்தை ரெயில் நிலையத்தில் நிறுத்துவதற்கு பணம் செலுத்தும் முறை ஏற்பாடு செய்யப்படும். சுமார் 2 மாதத்திற்கு கியூ.ஆர். குறியீடு அடிப்படையிலான பயணச்சீட்டு முறை தொடங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News