செய்திகள்
இறந்த தொழிலாளர்களுக்காக முதலைக் கண்ணீர் வடிக்கும் அரசுகள்- ப.சிதம்பரம் கடும் தாக்கு
புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து காங்கிரஸ் குரல் எழுப்பியபோது அரசுகள் கண்டுகொள்ளவில்லை என்றும் இப்போது இறந்தவர்களுக்காக முதலைக் கண்ணீர் வடிப்பதாகவும் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
சென்னை:
முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
புலம்பெயர் தொழிலாளர்கள் தவிப்பது குறித்து காங்கிரஸ்தான் முதலில் கேள்வி எழுப்பியது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களை உள்ளடக்கியிருக்கும் ஏழை 50 சதவீத குடும்பங்களுக்கு ரொக்கமும் உணவுப் பொருட்களும் வழங்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் தான் முதலில் வலியுறுத்தியது.
புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப நடவடிக்கை எடுக்கும்படி காங்கிரஸ் குரல் எழுப்பியபோது கண்டுகொள்ளவில்லை. காங்கிரசின் குரலை அரசுகள் காதில் வாங்கவே இல்லை.
இப்போது, ரெயில் மோதி உயிரிழந்த புலம்பெயர் தொழிலாளர்களுக்காக அரசுகள் முதலைக் கண்ணீர் வடிக்கின்றன. நெடுஞ்சாலைகள், தண்டவாளங்களில் நடக்கும் விபத்துகள் அனைத்தும் அரசுகளுக்கு தவிர அனைவருக்கும் தெரிகின்றன.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.