செய்திகள்
முக ஸ்டாலின்

புதிய மின்சார திருத்தச் சட்டத்தை கடுமையாக எதிர்க்க வேண்டும் - தமிழக அரசுக்கு, மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

Published On 2020-05-09 04:05 GMT   |   Update On 2020-05-09 04:05 GMT
இலவச மின்சாரத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் புதிய மின்சார திருத்தச் சட்டத்தை கடுமையாக எதிர்க்க வேண்டும் தமிழக அரசை மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை:

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கூட்டாட்சித் தத்துவத்திற்கு வேட்டு வைத்திடும் மற்றொரு முயற்சியாக, மாநில உரிமைகளை முழுமையாகப் பறிக்கும் விதத்திலும், பொதுப்பட்டியலில் உள்ள மின்சாரம் தொடர்பான அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசே அபகரித்துக் கொள்ளும் உள்நோக்கத்துடனும் 2020-ம் ஆண்டு புதிய மின்சார திருத்தச் சட்டத்தை கொண்டு வரும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு, தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

2014, 2018 ஆகிய ஆண்டுகளில் முயற்சி செய்து தோற்றுப்போன இந்த திருத்தச் சட்டத்தை, மாநிலங்கள் எல்லாம் கொரோனா நோய்த்தொற்று பேரிடரை சமாளிக்கும் “உயிர்காக்கும்” முயற்சியில் தீவிரமாகப் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், கொண்டு வந்து கருத்துக் கேட்பது மிகுந்த கவலையளிக்கிறது.

கொரோனாவிலிருந்து மனித உயிர்களைக் காக்கும் முயற்சிகள் குறித்தோ, ஸ்தம்பித்து மூச்சுத்திணறி ஊசலாடிக் கொண்டிருக்கும் நாட்டின் பொருளாதாரத்தைப் பற்றியோ, கிஞ்சித்தும் கவலைப்படாமல் அதிகாரப் பசியில் இப்படி ஒரு சட்டத்தை நிறைவேற்றிட மத்திய பா.ஜ.க. அரசு முனைவது வேதனையளிக்கிறது.

சுமுகமான மத்திய-மாநில உறவுகளை அடியோடு வெறுக்கும் ஒரு பிரதமராக அடுத்தடுத்த அதிகார பறிப்புகள் மூலம் நரேந்திர மோடி தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வது நாம் அனைவரும் இந்திய மக்கள் என்று அரசியல் சட்டம் வகுத்துள்ள கோட்பாட்டிற்கு முற்றிலும் எதிரானது.

புதிய மின் திருத்தச் சட்டத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தேசியக் கொள்கையை மத்திய அரசே வகுக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையங்கள் எல்லாம் இனி மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு, மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்குத் தலைவர், உறுப்பினர்களைக் கூட இனிமேல் மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தேர்வுக் குழுவே தேர்வு செய்யும். இந்த ஐந்து பேர் கொண்டு தேர்வுக் குழுவில் மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களில் இருவர் மட்டுமே உறுப்பினர்களாக இருப்பார்கள். அவர்களுக்கும் கூட ஒரு வருடப் பதவிக்காலம் கொடுக்கப்பட்டு மாநிலங்களின் பெயர் அகரவரிசைப்படி உறுப்பினர்களாக நியமிக்கப்படுவர்.

உதாரணத்திற்கு, முதல் தேர்வுக்குழுவில் ஆந்திரா மற்றும் அருணாசல பிரதேச மாநிலத் தலைமைச் செயலாளர்கள் இடம்பெறுவார்கள் என்றால், அடுத்ததாக ‘டி’ பெயர் வரிசையில் வரும் தமிழ்நாடு இன்னும் ஒரு பத்தாண்டுகளுக்கு இந்த தேர்வுக்குழுவில் இடம்பெறவே முடியாது!

ஒருவேளை தமிழ்நாட்டில் உள்ள மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் உறுப்பினரோ, தலைவரோ இல்லாமல் இருந்தால் தமிழ்நாடு ஆணையத்தின் பணியை வேறொரு மாநிலத்தின் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கவனிக்க மத்திய அரசு உத்தரவிடலாம் என்று இன்னொரு பிரிவு கூறுகிறது. இது என்ன கூத்து? ஒரு மாநிலத்தின் நிர்வாகத்தை இன்னொரு மாநிலம் எப்படிக் கவனிக்க முடியும்?.

மத்திய அரசு, தற்போது இந்த ஆணையத்தை தனது நேரடிக் கட்டுப்பாட்டிலேயே எடுத்துக் கொள்வது ஆபத்தான ‘அதிகார’ விளையாட்டு!

‘இனிமேல் மின்சார மானியங்களைப் படிப்படியாகக் குறைத்து அதற்கான பணத்தை நேரடியாகச் சம்பந்தப்பட்ட நுகர்வோருக்கு வழங்கிட வேண்டும்’ என்று கொண்டு வரப்படும் சட்டத் திருத்தம், கருணாநிதி கொண்டுவந்த விவசாயிகளின் இலவச மின்சாரத் திட்டத்திற்கும், ஏழை-நடுத்தர மக்களுக்கு 100 யூனிட் வரை வழங்கப்படும் இலவச மின்சாரத்திற்கும் மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்.

அதுமட்டுமின்றி மின் கொள்முதல், மின் விற்பனை, மின்சாரத்தை அனுப்புதல் உள்ளிட்ட அனைத்து ஒப்பந்தங்கள் தொடர்பான தாவாக்களை, இனிமேல் மத்திய அரசின்கீழ் அமைக்கப்படும் மின் ஒப்பந்த அமலாக்க ஆணையம் ஒன்றே தீர்வு காணும் என்பதும், மாநிலங்களுக்கு எந்தவொரு பிரதிநிதித்துவமும் இல்லாமல் இப்படியொரு ஆணையத்தை உருவாக்குவதும், மாநிலங்களிடம் இருக்கின்ற அதிகாரத்தையும் ‘எள்ளி நகையாடும்’ போக்காகும்.

ஆகவே, மின்சாரத்தை மத்திய அரசு மயமாக்கும் இந்த கருப்புச் சட்டமான புதிய மின்சார திருத்தச் சட்டம் 2020-ஐ அ.தி.மு.க. அரசு கடுமையாக எதிர்த்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மாநில உரிமைகளைக் காப்பாற்றி, கூட்டாட்சித் தத்துவத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதில் ஆர்வமும் நம்பிக்கையும் உள்ள பா.ஜ.க. அல்லாத மாநில அரசுகள் அனைத்தும் இந்த சட்டத் திருத்தத்தைக் கடுமையாக எதிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மாநிலங்களை ஓரங்கட்டி, அதிகாரங்களை மையப் படுத்திக் கொள்ளும் அடுத்தகட்டமான இந்த சட்டத் திருத்தத்தை, மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News