செய்திகள்
டாஸ்மாக் கடைகளை திறப்பதால் நோய்த் தொற்று அதிகரிக்கும்- மு.க.ஸ்டாலின்
ஊரடங்கு காலத்தில் மீண்டும் மீண்டும் மக்கள் கூட்டமாகக் கூடுவதற்கான சூழலை அரசு உருவாக்குவது, கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை அதிகரிக்கவே செய்யும் என மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
சென்னை:
அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திராவில் மதுக்கடைகள் ஏற்கனவே திறக்கப்பட்டுள்ள நிலையில் மே 7-ம் தேதி முதல் தமிழகத்திலும் டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
இன்று அரசிடமிருந்து பேரிடர் பாதுகாப்புக்கான முக்கிய அறிவிப்பு வரும் என்று தமிழக மக்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் வந்ததோ, டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறப்புக் குறித்த அறிவிப்பு!
ஊரடங்கினால் அரசுக்கு ஏற்பட்டிருக்கும் வருவாய் இழப்பை சரிசெய்ய, மக்கள் மீது பழிபோடுவது நியாயமல்ல!
ஊரடங்கு காலத்தில் மீண்டும் மீண்டும் மக்கள் கூட்டமாகக் கூடுவதற்கான சூழலை உருவாக்குவது, கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை அதிகரிக்கவே செய்யும்.
ஆளுமையும் அக்கறையும் உள்ள எந்த ஓர் அரசும் இப்படிப்பட்ட அபாயகரமான நடவடிக்கையை மேற்கொள்ளாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.