பட்டாசு, தீப்பெட்டி ஆலைகளை திறக்க நடவடிக்கை- அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேட்டி
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவலாயங்களில் பணியாற்றும் ஜெப ஊழியர்களுக்கு தலா 10 கிலோ அரிசியை பால் வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பாக தொடர்ந்து பல்வேறு நிவாரணப் பொருட்கள் வழங்கி வருகிறோம். இன்று மாவட்டத்தில் உள்ள 475 திருச்சபையில் பணியாற்றும் ஜெப ஊழியர்களுக்கு அரிசி வழங்கியுள்ளோம்.
ஏழைகளுக்கு செய்கின்ற தொண்டுதான் இறைவனுக்கு செய்கின்ற தொண்டு என்று எல்லா மதமும் கூறுகிறது.
உதவிகள் செய்தவன் மூலம்தான் இறைவனை காண முடியும். வேறு என்ன வழிபாடு செய்தாலும் இறைவனை காண முடியாது என்று எல்லா மதமும் கூறுகிறது. கொரோனா வைரஸ் தாக்குதல் அனைவரையும் ஒற்றுமைப்படுத்தியிருக்கிறது.
ஒருவருக்கொருவர் உதவி செய்து வருகின்றனர். தற்போதுள்ள சூழ்நிலையில் மதங்களை எல்லாம் தாண்டி மனிதாபிமானம் ஓங்கி நிற்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் அனைத்து கிறிஸ்தவர்கள் ஐக்கிய சபையின் மாவட்ட நிர்வாக இயக்குநர் பால்ராஜ்கிருபாகரன், மாவட்ட தலைவர் ஜேக்கப்ஜேம்பு, மாவட்ட செயலாளர் தாமஸ் விக்டர், மாவட்ட பொளாளர் ஜோஸ்வாகண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அமைச்சர் நிருபர்களிடம் கூறுகையில், தமிழகம் முழுவதும் மே 17-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் சில தளர்வுகள் குறித்து முதல்வர் அறிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகள், தீப்பெட்டி தொழிற் சாலைகள் திறப்பது குறித்து மாவட்ட கலெக்டருடன் ஆலோசனை நடத்தி அதனை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நியாயவிலைக் கடைகள் மூலமாக அனைத்து பொதுமக்களுக்கும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது என்றார்.