செய்திகள்
தற்கொலை

மருத்துவக்கல்லூரி மாணவி தற்கொலை- போலீசார் விசாரணை

Published On 2020-04-25 14:19 GMT   |   Update On 2020-04-25 14:19 GMT
குலசேகரம் அருகே மருத்துவக்கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குலசேகரம்:

திண்டுக்கல் மாவட்டம் காட்டூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவருடைய மகள் பிரித்தி மீனாட்சி (வயது 21). இவர் குமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் உள்ள ஒரு மருத்துவக்கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

மகளின் படிப்புக்காக குலசேகரம் அரமன்னம் பகுதியில் உள்ள வீட்டை வாடகைக்கு எடுத்து சுரேஷ் குடும்பத்துடன் குடியேறினார். மேலும் சுரேசும், அவருடைய மனைவியும் சேர்ந்து நாக்கோடு சந்திப்பில் ‘சிப்ஸ்‘ வியாபாரம் செய்தனர். வீட்டில் இருந்தபடி தினமும் பிரித்தி மீனாட்சி மருத்துவக்கல்லூரிக்கு சென்று வந்தார்.

தற்போது ஊரடங்கால் கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் அவர் வீட்டிலேயே தங்கினார். கடைகள் அடைக்கப்பட்டதால் சுரேசும் வீட்டிலேயே இருந்தார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு அனைவரும் வீட்டில் குடும்பத்துடன் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது பிரித்தி மீனாட்சி அங்கிருந்து கிளம்பி வீட்டில் உள்ள ஒரு அறைக்கு சென்றார். வெகுநேரமாகியும் மகள் திரும்பி வராததால் சுரேஷ் அந்த அறைக்கு சென்றார். ஆனால் அந்த அறை உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, பிரித்தி மீனாட்சி தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் கிடந்தார்.

உடனே அவர் மகளின் உடலை பார்த்து கதறி அழுதார். கஷ்டப்பட்டு படிக்க வைத்தேனே, இப்படி செய்து விட்டாயே என்று கண்ணீர் வடித்தார். பின்னர் இதுகுறித்து குலசேகரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே இன்ஸ்பெக்டர் ராஜசுந்தர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பிரித்தி மீனாட்சியின் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை.

மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மருத்துவக்கல்லூரி மாணவி தற்கொலை செய்தது ஏன்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குலசேகரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News