செய்திகள்
ராமதாஸ்

கட்டுப்பாட்டை கைவிட்டால் ஆபத்து நேரிடும்- ராமதாஸ் எச்சரிக்கை

Published On 2020-04-21 11:32 GMT   |   Update On 2020-04-21 11:32 GMT
மக்கள் வெளியில் நடமாடுவதை தவிர்க்காவிடில் மே 3-ந் தேதிக்கு பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதற்கு நாமே காரணமாகி விடுவோம் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்படவிருப்பதாகவும், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாகவும் வெளியாகி வரும் செய்திகள் மக்களிடையே அலட்சிய உணர்வை ஏற்படுத்தியிருப்பதாக தெரிகிறது.

சென்னை உட்பட தமிழ்நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் கடந்த இரு நாட்களாக மக்கள் நடமாட்டம் அதிகரித்து வருவது இதைத் தான் காட்டுகிறது.

நேற்று முதல் சாலைகளிலும், பொது இடங்களிலும் மக்கள் நடமாட்டம் அதிகரித்திருக்கிறது. மக்களின் உணவுத் தேடலை குறை கூற முடியாது. ஆனால், அத்தகையத் தேடலின் போது சமூக இடைவெளி விதிகளை சற்றும் மதிக்காமல் ஒருவரை ஒருவர் நெருக்கிக் கொண்டு கூடியது தான் பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. உணவுக்காக இறைச்சி, மீன்களை வாங்கச் சென்றவர்கள் கொரோனாவையும் வாங்கி வந்துவிடக் கூடாது என்பதே எனது கவலை.

அதேபோல், சாலைகளிலும் பொதுமக்கள் எந்த விதமான குற்ற உணர்ச்சியும், பொறுப்புணர்வும் இல்லாமல் நடமாடுகின்றனர். அவர்களில் பலர் முகக்கவசம் கூட அணிவதில்லை. மக்கள் நடமாட்டம் திடீரென அதிகரித்திருப்பது குறித்து விசாரித்த போது தான், சில இடங்களில் நடைமுறைக்கு வரும் ஊரடங்கு தளர்வு தங்கள் பகுதிக்கும் பொருந்தும் என்ற தவறான எண்ணத்தில் கட்டுப்பாடுகளை தகர்த்துக் கொண்டு மக்கள் நடமாடத் தொடங்கியிருப்பதை அறிய முடிந்தது. இது மிகவும் ஆபத்தானது.

ஊரடங்கு தளர்வு என்பது கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு மட்டும் தான் பொருந்தும். தமிழகத்தைப் பொருத்தவரை எந்த மாவட்டங்களிலும் ஊரடங்கை தளர்த்துவது குறித்து தமிழ்நாடு அரசு இதுவரை எந்த முடிவையும் அறிவிக்கவில்லை.

தமிழ்நாட்டில் ஊரடங்கு ஆணை இன்னும் இரு வாரங்களுக்கு நடைமுறையில் இருக்கும். அதுவரை அனைவரும் ஏற்கனவே இருந்ததை விட கூடுதல் கட்டுப்பாட்டுடன் இருந்து கொரோனா வைரசை முற்றிலுமாக ஒழிப்பதற்கான அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். காவல்துறையினரும் இதுவரை காட்டிய கண்டிப்பை விட இரு மடங்கு கூடுதல் கண்டிப்பை காட்டி மக்கள் வெளியில் நடமாடுவதை தடுக்க வேண்டும். இவற்றை செய்யத் தவறினால் மே 3-ந் தேதிக்கு பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதற்கு நாமே காரணமாகி விடுவோம். அந்தத் தவறை செய்யக்கூடாது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News