செய்திகள்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை குளிர்வித்த மழை
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக சென்னையில் இன்று மதியம் திடீரென மழை பெய்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
சென்னை:
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக வறண்ட வானிலை நிலவியது. ஆனால் தென் மாவட்டங்களிலும், மேற்கு தொடர்ச்சி மலையை சார்ந்த சில மாவட்டங்களிலும் சில தினங்களுக்கு முன் ஒரு மணி நேரம் மழை பெய்தது.
இதற்கிடையே, தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் நிலவுவதால் சில மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலையே காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி புவியரசன் கூறியிருந்தார்.
இந்நிலையில், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று மதியம் முதல் மழை பெய்து வருகிறது. சென்னையில் வேப்பேரி, புரசைவாக்கம், எழும்பூர், பெரியமேடு, சின்னமலை, கிண்டி, அடையாறு, கோடம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.
கடந்த சில நாட்களாக வறண்ட வானிலையுடன் காணப்பட்ட சென்னையில் வெப்ப சலனம் காரணமாக பெய்த திடீர் மழை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதேபோல், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று மழை பெய்து வருகிறது. பம்மல், ஆவடி, திருமுல்லைவாயில், பட்டாபிராம், திருநின்றவூர் அனகாபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து, சென்னை பகுதியில் வசிக்கும் மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.