ஊரடங்கு உத்தரவால் சமையல் கியாஸ் பயன்பாடு 13 சதவீதம் அதிகரிப்பு
சென்னை:
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் கடந்த 24-ந்தேதி முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கிறார்கள்.
இந்த ஊரடங்கு உத்தரவால் சமையல் கியாஸ் உபயோகம் அதிகரித்து உள்ளது. மக்கள் வீடுகளில் இருப்பதால் சாப்பாடு பயன்பாடு அதிகரித்துள்ளது. ஓட்டல்கள் , டீக்கடைகள் மற்றும் உணவு பொருட்களுக்கான கடைகள் மூடப்பட்டுள்ளன. ஓட்டல்களில் பார்சல் உணவு மட்டும் வழங்கப்படுகிறது. இதனால் வீடுகளில் அதிக அளவில் சமையல் கேஸ் பயன்பாடு இருக்கிறது. எனவே அதற்கான தேவையும் கூடுதலாகிவிட்டது.
ஊரடங்கு உத்தரவுக்கு பிறகு தமிழ்நாட்டில் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களின் சமையல் கியாஸ் சிலிண்டர்களின் சப்ளை 12 லட்சம் அதிகரித்துள்ளது. அதாவது 13 சதவீதம் உயர்ந்து உள்ளது.
இந்தியன் ஆயில் நிறுவனம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 60 லட்சம் சிலிண்டர்களை சப்ளை செய்தது. இந்த ஆண்டில் தற்போது அது 68 லட்சமாக உயர்ந்துள்ளது. இதேபோல மற்ற பெட்ரோலிய நிறுவனங்களின் சிலிண்டர்கள் சப்ளையும் அதிகரித்துள்ளன.
இந்த ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 30-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டால் சமையல் கியாஸ் பயன்பாடு 25 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாக அதிகரிக்கலாம் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது