செய்திகள்
பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்தபோது எடுத்தபடம்.

நெல்லையில் நிவாரண பொருட்கள் வாங்க ரேஷன் கடையில் குவிந்த பொதுமக்கள்

Published On 2020-04-08 13:56 GMT   |   Update On 2020-04-08 13:56 GMT
நெல்லையில் நிவாரண பொருட்கள் வாங்க ரேஷன் கடையில் பொது மக்கள் குவிந்தனர்.
நெல்லை:

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் வருகிற 14-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். பொதுமக்கள் பொருளாதார வசதி இன்றி தவித்து வருகின்றனர்.

இந்த சூழ்நிலையை சமாளிக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.1,000 மற்றும் அரிசி, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்க உத்தரவிடப்பட்டது.

கடந்த 2-ந்தேதி முதல் நிவாரண நிதி ரூ.1,000 வழங்கும் பணி தொடங்கப்பட்டது. முதலில் ரேஷன் கடைகளில் டோக்கன் முறையில் வழங்கப்பட்ட நிவாரண நிதி பின்னர் வீடு, வீடாக வழங்கப்பட்டது. அரிசி வாங்குவதற்கான ‘ஸ்மார்ட் கார்டு‘ வைத்திருப்பவர்களுக்கு இந்த நிவாரண உதவித்தொகை வழங்கும் பணி முடிவடைந்துள்ளது. இந்த நிதி வாங்காதவர்கள் இந்த மாத இறுதிக்குள் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நிவாரண நிதி பெற்றவர்களில் பெரும்பாலானோருக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்படவில்லை. அவர்களுக்கு ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

நெல்லையில் தச்சநல்லூர், பேட்டை, பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் நேற்று நிவாரண பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் கூட்டம், கூட்டமாக குவிந்தனர். அவர்கள் வரிசையாக இடைவெளி விட்டு நிற்கும் வகையில் வட்டம், கோடு ஆகியவை போடப்பட்டிருந்தது. அதில் பொதுமக்கள் இடைவெளி விட்டு நின்று நிவாரண பொருட்களை வாங்கிச்சென்றனர்.
Tags:    

Similar News