செய்திகள்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்தது - கலெக்டர் தகவல்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்தாக கலெக்டர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.
அரக்கோணம்:
அரக்கோணத்தில் கிருஷ்ணாம்பேட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்து ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா தடுப்பு விழிப்புணர்வையொட்டி வருகிற 14-ந்தேதி வரை வங்கிகள் இயங்காது. பொதுமக்கள் ஏ.டி.எம். எந்திரத்தை பயன்படுத்தி கொள்ளலாம். ஒவ்வொரு தெருவிற்கும் பொதுமக்களுக்கு உதவி செய்ய 4 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பொதுமக்களுக்கு தேவையான பொருள்களை வாங்கி தருவார்கள். ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா அறிகுறி உள்ளவர்கள் 28 நாட்கள் 740 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். தற்போது அவர்களின் எண்ணிக்கை 320-ஆக குறைந்துள்ளது. அடுத்த 7 நாளில் மேலும் குறையும். கொரோனா அறிகுறி இருப்பது யாருக்காவது தெரியவந்தால் உதவி கலெக்டர், தாசில்தார் உள்பட அரசு அதிகாரிகளுக்கும், ராணிப்பேட்டை மாவட்ட கொரோனா கட்டுப்பாட்டு அறை எண்ணிற்கும் தொலைபேசியில் தகவல் தெரிவித்தால் 5 முதல் 10 நிமிடங்களுக்குள் டாக்டர்கள் குழு குறிப்பிட்ட இடத்திற்கு வந்து தேவையான நடவடிக்கை எடுக்கப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன், உதவி கலெக்டர் பேபி இந்திரா, தாசில்தார் ஜெயக்குமார் மற்றும் நகராட்சி ஆணையாளர் ராஜவிஜய காமராஜ், அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.