செய்திகள்
காயத்ரி ரகுராம்

சீன அதிபருக்கு கடிதம் எழுதுங்கள்- கமல் மீது காயத்ரி ரகுராம் பாய்ச்சல்

Published On 2020-04-07 10:07 GMT   |   Update On 2020-04-07 10:07 GMT
பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ள மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசனை பா.ஜனதாவை சேர்ந்த காயத்திரி ரகுராம் கடுமையாக சாடியுள்ளார்.
சென்னை:

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் கொரோனாவுக்கு எதிரான போரில் நாட்டு மக்கள் ஒற்றுமையுடன் இருப்பதை காண்பிக்கும் விதமாக விளக்கேற்ற சொன்ன பிரதமர் மோடியை விமர்சித்து கடிதம் எழுதினார். அதில் ‘எண்ணெய் இல்லை; விளக்கேற்ற முடியுமா?. உங்கள் தொலைநோக்கு பார்வை தோற்றுவிட்டது.

கடந்த இரு முறை நாட்டு மக்களுக்கு உரையாற்றிய நீங்கள் இந்த கடினமான சூழலில் பிரச்னைகளை சந்திக்கும் மக்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கினீர்கள். தலைமேல் கூரையே இல்லாதோரின் நிலை என்னவாவது? நம் சமூகத்தில் அதிகமாக இருக்கும் ஏழை மக்களை புறக்கணித்துவிட்டு பால்கனி மக்களுக்காக இயங்கும் அரசாக நீங்கள் உள்ளீர்கள்’ என எழுதி இருந்தார்.

இதனை விமர்சித்து பா.ஜனதாவை சேர்ந்த காயத்திரி ரகுராம் டுவிட்டரில் பதிவிட்டு இருப்பதாவது: நீங்கள் ஏன் சீன அதிபர் ஜின்பிங்குக்கும், தப்லிக் இ ஜமாத்துக்கும் கடிதம் எழுதி அவர்களின் தோல்வியை சுட்டிக்காட்டக்கூடாது? அரசின் உத்தரவை மதிக்காத, கீழ்படியாமல் இருக்கும் பொறுப்பற்ற குடிமக்களுக்கு கடிதம் எழுதுங்கள். தமிழக முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர் தோல்வியடைந்தார்கள் என கூறுகிறீர்களா? தமிழக எம்.எல்.ஏ., எம்.பி.,க்களுக்கு முதலில் கடிதம் எழுதி அவர்களிடம் முறையிடுங்கள்.

பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதுவது ஒரு டிரெண்ட் ஆகி விட்டது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் ஒற்றுமையை காட்டினார்கள். அதில் நீங்கள் பங்கேற்கவில்லை என உங்களுக்கு உறுத்தவில்லையா? மத்திய- மாநில அரசுகள் கடுமையாக உழைத்து வருகின்றன. மேம்போக்காக எழுதாமல், உரிய தகவல்களோடு எழுதுங்கள்.

இவ்வாறு அவர் டுவிட்டரில் கமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
Tags:    

Similar News