செய்திகள்
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா

வேளாண் எந்திரங்களை வாடகையின்றி விவசாயிகள் உபயோகப்படுத்தலாம் - கலெக்டர் சாந்தா தகவல்

Published On 2020-04-04 14:29 GMT   |   Update On 2020-04-04 14:29 GMT
பெரம்பலூர் மாவட்டத்தில் வேளாண் எந்திரங்களை வாடகையின்றி விவசாயிகள் உபயோகப்படுத்தலாம் என கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

விவசாயிகளின் நலன் கருதி, விவசாய பொருட்கள் கொள்முதல், விதை மற்றும் உர விற்பனை நிலையங்கள், விவசாய எந்திரங்கள் மற்றும் வாடகை மையங்கள் போன்றவைக்கு நடப்பு ஊரடங்கு உத்தரவு காலத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் டிராக்டர்கள் மற்றும் வேளாண் எந்திரங்களை சிறு மற்றும் குறு விவசாயிகள் அனைத்து விதமான விவசாய பணிகளை மேற்கொள்வதற்காக 90 நாட்களுக்கு வாடகையின்றி உபயோகப்படுத்திக்கொள்ள வழங்கப்பட உள்ளது.

டிராக்டர் உள்ளிட்ட பண்ணை எந்திரங்கள் தேவைப்படும் சிறு மற்றும் குறு விவசாயிகள் கீழ்காணும் முறையில் பதிவு செய்து கொள்ளலாம். உழவன் செயலியில் உள்ள வேளாண் எந்திர வாடகை சேவையின் மூலம் எந்திர வாடகை மற்றும் விடுதல் சேவையை பயன்படுத்தி, விவசாயிகள் தங்களுக்கு தேவையான வேளாண் எந்திரம், தேதி மற்றும் நேரத்தை பதிவிட்டு முன்பதிவு செய்து கொள்ளலாம். தனியார் நிறுவனங்களின் சேவை மையத்தை 18004200100 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டும், தனியார் நிறுவனங்களின் கள அலுவலர்களை தொடர்பு கொண்டும் விவசாயிகள் தங்களுக்கு தேவையான வேளாண் எந்திரம், தேதி மற்றும் நேரத்தை குறிப்பிட்டு முன்பதிவு செய்யலாம்.

எனவே, சிறு மற்றும் குறு விவசாயிகள் அனைவரும் மேற்கண்ட ஏதேனும் ஒரு முறையில் தங்களுக்கு தேவையான டிராக்டர் உள்ளிட்ட பண்ணை எந்திரங்களை பதிவு செய்து வாடகை கட்டணம் இல்லாமல் விவசாய பணிகளை மேற்கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News