செய்திகள்
வெளிநாடு செல்ல முடியாத விரக்தியில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
கொரோனாவால், விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் வெளிநாடு செல்ல முடியாத விரக்தியில் தொழிலாளி, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கபிஸ்தலம்:
தஞ்சை மாவட்டம் சுவாமிமலை மேட்டுத்தெருவை சேர்ந்தவர் ஞானஸ்கந்தன்(வயது 40).தொழிலாளி. இவருக்கு திருமணமாகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். வெளிநாட்டில் வேலை செய்து வந்த ஞானஸ்கந்தன், கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார். இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. பஸ், ரெயில், விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் வெளியூர்களுக்கு செல்ல முடியாமல் வீட்டிலே முடங்கி உள்ளனர். விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் வெளிநாடு செல்ல முடியாமல் விரக்தி அடைந்த ஞானஸ்கந்தன், மிகுந்த சோகத்துடன் வீட்டில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த சுவாமிமலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஞானஸ்கந்தனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெளிநாடு செல்ல முடியாத விரக்தியில் தொழிலாளி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சுவாமிமலை பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.