செய்திகள்
செந்தில் பாலாஜி

தூய்மை பணியாளர்களுக்கு முகக்கவசம் வழங்கிய செந்தில் பாலாஜி எம்.எல்.ஏ.

Published On 2020-04-03 11:10 GMT   |   Update On 2020-04-03 11:10 GMT
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்களுக்கு உணவு, முகக்கவசம், கிருமி நாசினி ஆகியவற்றை செந்தில் பாலாஜி எம்.எல்.ஏ. வழங்கினார்.
வேலாயுதம்பாளையம்:

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் பகுதியில் புஞ்சை புகழூர், காகிதபுரம், புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சிகளில் சுகாதார பணியாளர்கள் மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் இணைந்து பொதுமக்களுக்கு கெரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது, சளி, காய்ச்சல், இருமல் அறிகுறி உள்ளவர்களை பரிசோதிப்பது, வீதிகள் தோறும் குப்பைகளை அகற்றி கிருமி நாசினி தெளிப்பது உள்ளிட்ட பணிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

அவர்களுக்கு உதவும் வகையில் புஞ்சைபுகழூர், தோட்டக்குறிச்சி, காகிதபுரம் பேரூராட்சிகளில் பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்கள் மற்றும் தோட்டக்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சேர்ந்த மருத்துவ பணியாளர்கள், குந்தாணிபாளையம், நத்தமேடு, கலைக்கூத்து நகரை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆகியோருக்கு அரவக்குறிச்சி எம்.எல்.ஏ.வும், தி.மு.க. மாவட்டபொறுப்பாளருமான செந்தில்பாலாஜி உணவு, முகக்கவசம், கிருமி நாசினி ஆகியவற்றை வழங்கினார்.

அப்போது அவர் கூறும் போது, கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சுகாதார பணியாளர்கள் மற்றும் துப்புரவு தொழிலாளர்களான நீங்கள் மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வருகிறீர்கள். உங்களின் சேவையை பாராட்டுவதுடன் உங்களுக்கு உணவு மற்றும் மாஸ்க், கிருமி நாசினி உள்ளிட்டவைகளை எந்த நேரம் எவ்வளவு கேட்டாலும் வழங்க தயாராக உள்ளேன் என்றார்.

செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ. ஏற்கனவே கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக அரசு மருத்துவமனைகளுக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்காக தனது மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 1 கோடி ஒதுக்கி தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில் தி.மு.க. நிர்வாகிகள் கந்தசாமி, ரவிக்குமார், செந்தில்ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News