செய்திகள்
ராஜபாளையம் யூனியன் பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து எம்.எல்.ஏ. ஆலோசனை
ராஜபாளையம் ஊராட்சிப்பகுதிகளில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. ஆலோசனை நடத்தினார்.
ராஜபாளையம்:
ராஜபாளையம் ஊராட்சிப்பகுதிகளில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. சேர்மன் சிங்கராஜ், ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், சத்தியவதி மற்றும் மருத்துவர் கருணாகர பிரபு, தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயராம் ஆகியோர் கலந்து கொண்ட ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் ராஜபாளையம் ஒன்றியத்தில் உள்ள 36 ஊராட்சிகளிலும் அனைத்து தெருக்களிலும் கிருமிநாசினி மருந்து தெளிக்க உத்தரவிட வேண்டும் என்று எம்.எல்.ஏ. கூறினார். மேலும் ஊராட்சிகளில் யாருக்கும் காய்ச்சல் உள்ளதா வைரஸ் தொற்று உள்ளதா என்பதை வீடு வீடாக கணக்கு எடுத்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவக்குழு அமைக்க வேண்டுமென மருத்துவர் கருணாகரபிரபுவிடம் எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.
அதனைத்தொடர்ந்து பேசிய சேர்மன் அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் கிளர்க்கை அழைத்து உடனடியாக கிருமி நாசினி மருந்து தெளிக்க உத்தரவிடுவதாக கூறினார். கூட்டத்தில் தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் மாரிமுத்து மற்றும் அரசு அலுவலர்கள் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.